உ.பி. கெடுவை மீறி டெல்லி காசிப்பூர் எல்லையில் இரவிலும் விவசாயிகள் போராட்டம்- பதற்றம்!
டெல்லி: டெல்லி காசிப்பூர் எல்லையில் இருந்து கலைய வேண்டும் என உபி அரசு பிறப்பித்த உத்தரவை மீறி இரவிலும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் அமைதிவழியில் 63 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி நகருக்குள் டிராக்டர்கள் ஊர்வலம் நடத்தப்பட்டது பெரும் மோதலை ஏற்படுத்தியது.
விவசாயிகளுடன் உள்ளே நுழைந்த சமூக விரோதிகள்தான் இந்த மோதல்களுக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் இம்மோதல்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன.

இரவுக்குள் முடிக்க கெடு
இந்த நிலையில் காசிப்பூர் எல்லையில் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தை இன்று இரவுக்குள் முடிவுக்கு கொண்டுவருவதில் உத்தரப்பிரதேச அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. முதல் கட்டமாக காசிப்பூர் போராட்ட இடத்தில் இருந்து இரவுக்குள் அனைத்து விவசாயிகளும் வெளியேற வேண்டும் என காசியாபாத் உள்ளூர் நிர்வாகம் கெடு விதித்துள்ளது.

சரணடைய மறுப்பு
இதனிடையே டெல்லி வன்முறைகள் தொடர்பாக சரணடைய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்துக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் நாங்கள் சரணடைய முடியாது; குடியரசு தின வன்முறைகள் தொடர்பாக உச்சநீதிமன்ற குழு விசாரணை நடத்தட்டும் என்கிறார் ராகேஷ் திகாயத்.

முடிவுக்கு வரும்
அதேநேரத்தில் அவரது சகோதரர் நரேஷ் திகாயத், இன்று இரவுக்குள் காசிப்பூர் எல்லைப் போராட்டம் முடிவுக்கு வரும் என கூறியுள்ளார். இன்னொரு பக்கம் காசிப்பூர் எல்லை போராட்டம் தொடர்ந்தால் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை உ.பி. அரசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடரும் போராட்டம்
இந்த நிலையில் காசிப்பூர் எல்லையில் உத்தரப்பிரதேச அரசின் கெடுவை மீறி இரவிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே உத்தரப்பிரதேச அரசின் கெடுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications