சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள ஆதித்யநாத் எடுத்துள்ள பிரம்மாஸ்திரம்
டெல்லி: சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வியூகத்தை முறியடிக்க, உத்தர பிரதேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கையில் எடுத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவினருக்கு (OBC) 27 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. இதையே மூன்றாக பிரித்து இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோர், மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவுகளின்கீழ் உள் இட ஒதுக்கீடு வழங்க யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.
பிற்டுத்தப்பட்டோர் 7 சதவீதம், மேலும் பிற்படுத்தப்பட்டோர் 11 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 9 சதவீத இட ஒதுக்கீடு பலனை பெறுவார்கள் எனத் தெரிகிறது.
இதன் மூலமாக, யாதவ ஜாதியை தவிர்த்து பிற்படுததப்பட்ட ஜாதியினர் ஆதரவை பாஜக பெற திட்டமிட்டுள்ளது. ஏனெனில் யாதவர் ஜாதியினர் வழக்கமாக சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளார்கள். மாயாவதி தலித் வாக்குகளை ஈர்க்ககூடியவர். தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் இஸ்லாமியர் வாக்குகளை அதிகம் பெறக்கூடும். எனவே பாஜக இந்த அஸ்திரத்தை கையில் எடுத்து, பிற ஜாதியினரை வளைக்க முடிவு செய்துள்ளதாம்.
இந்த முடிவை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பிரம்மாஸ்திரம் என வர்ணித்துள்ளார்.
ஆனால் இந்த மாதிரியான உள் இட ஒதுக்கீட்டால், பாஜகவின் வாக்கு வங்கியாக உள்ள கர்மி ஜாதியினருக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால்தான் பலத்த யோசனையில் உள்ளாராம் யோகி ஆதித்யநாத். இப்போது இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி இட ஒதுக்கீட்டால் அதிகமாக பலனடைவது யாதவ ஜாதியினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.