ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள்- விண்வெளி துறையில் தனியார் மயம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: நாடு முழுவதும் மாநிலங்களின் கீழ் இருக்கும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் விண்வெளியில் தனியார் மயத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜிதேந்திர் பிரசாத் ஆகியோர் கூறியதாவது:

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்
நாடு முழுவதும் மொத்தம் 1540 கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அரசு வங்கிகள், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகள் ஆகியவை தற்போது ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. மத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் பிற வங்கிகளுக்கு பொருந்துவது போல், இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். இந்த 1540 கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடி முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கும் ரூ4.48 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் மயம்- விண்வெளித்துறை
விண்வெளித்துறை நடவடிக்கைகள் அனைத்திலும், தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான சீர்திருத்தங்களுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது விண்வெளித்துறையில் இந்தியாவின் ஆற்றலை திறக்கும். இந்திய விண்வெளி கட்டமைப்பை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கான வசதிகளை, புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரம் மையம்(IN-SPACe) வழங்கும். இது விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து வழிகாட்டும்.

ஓபிசி உட்பிரிவு கமிஷன்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள், உட்பிரிவு சிக்கலை ஆய்வு செய்ய, அரசியலமைப்பின் 340 வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை 6 மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஷிஷூ கடன் திட்டத்தில் தள்ளுபடி
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் ஷிஷூ கடன் பெறுபவர்களுக்கு 2% வட்டி தள்ளுபடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தகுதியான கடன்தாரர்களுக்கு இந்த சலுகை கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஓராண்டுக்கு பொருந்தும். மியான்மரில் பிளாக் ஏ-1, ஏ-3 மேம்பாட்டுக்கு, ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் கூடுதல் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications