மோடிக்கு திடீரென போன் போட்ட அதிபர் பைடன்.. அடுத்து உடனே லைனுக்கு வந்த ரஷ்ய அதிபர்! என்ன மேட்டர்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடனும், ரஷ்ய அதிபர் புதினும் வாழ்த்து தெரிவித்தனர்.
நமது நாட்டின் லோக்சபா தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இருப்பினும் 543 இடங்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களில் என்டிஏ கூட்டணி வென்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் சூழல் உருவாகி உள்ளது.
ஜோ பைடன்: இதற்கிடையே லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் என்டிஏ கூட்டணிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுமார் 65 கோடி மக்கள் வாக்களித்துள்ள இந்த தேர்தல் வரலாற்றுத் தேர்தல் என்றும் ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக எனது வாழ்த்துகள்.. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் வாக்களித்த 65 கோடி வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். நமது நாடுகளிடையேயான நட்பு தொடர்ந்து வளர வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதிபர்: அமெரிக்க அதிபர் பைடன் தொலைப்பேசி மூலம் பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. மோடி மற்றும் என்டிஏ கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறையும் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் இந்திய வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள், பத்திரிகையாளர்களின் பங்களிப்பு தவிர்க்கவே முடியாது என்றும் கூறப்பட்டு இருந்தது.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "செழிப்பு மற்றும் புதுமையை மேம்படுத்தவும், காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளவும், சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்தவும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின்: அதேபோல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் மோடிக்குத் தேர்தல் முடிவுகள் குறித்து தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் அன்புடன் வாழ்த்து தெரிவித்தார்" என்று அவர் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். .
பதவியேற்பு: மேலும், பிரதமர் மோடி வரும் நாளை ஜூன் 8 அல்லது 9ஆம் தேதி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் வங்கதேசம் மற்றும் நேபாள நாட்டின் பிரதமர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களைப் போல இந்த முறை பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் ஆட்சியை அமைக்க உள்ளார். நேற்று மாலை அவர் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி சார்பில் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications