இந்தியாவை அலறவிட்ட டிரம்ப்.. 27% வரியால் தங்க நகைக்கு வந்த பெரிய ஆபத்து! இனி அவ்வளவுதானா?
டெல்லி: இந்தியாவுக்கு 27 சதவீதம் வரை கூடுதல் வரியை டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் நம் நாட்டின் பல்வேறு தொழில் துறைகள் பாதிக்கப்பட உள்ளது. ரத்தின கற்கள் மற்றும் தங்க நகை தொழில் என்பது பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஏராளமானவர்கள் வேலையிழக்கும் அச்சம் உருவாகி உள்ளது. இதனால் மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அதிரடியாக வரிகளை விதித்து வருகிறார். அதாவது அமெரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு தனித்தனியே நாடுகள் வரிகளை விதிக்கின்றன. அதேபோல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாடு வரி விதிக்கிறது.

இதில் அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும், பிற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா குறைந்த வரிகளை விதிப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறினார். இதன்மூலம் அமெரிக்காவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கு விதிக்கும் வரியை போல் அமெரிக்காவும் விதிக்கும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி தொடர்ந்து கூடுதல் வரிகளை டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார். முதற்கட்டமாக கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். இதையடுத்து கடந்த 2 ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்தார். அதன்படி நம் நாட்டுக்கு 27 சதவீதம் வரை கூடுதல் வரி என்பது விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு என்பது பல்வேறு தொழில் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
குறிப்பாக நகை தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ரத்தின கற்கள், நகைகள் என்பது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு 6 சதவீதம் தான் அமெரிக்கா வரி விதிப்பது. ஆனால் தற்போது கூடுதலாக 27 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். இதன்மூலம் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரத்தின கற்கள், நகைகள் மீதான வரி என்பது 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நம் நாட்டின் நகை ஏற்றுமதியாளர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது.
ஏனென்றால் நம் நாட்டின் நகை ஏற்றுமதியில் அமெரிக்கா முக்கிய நாடாக உள்ளது. அதாவது நம் நாட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு ரத்தின கற்கள், நகைகள் என்பது அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு 33 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நகை, ரத்தினக்கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 3 ல் ஒரு பங்கு அதாவது சுமார் 10 பில்லியன் டாலர் அளவுக்கான ஏற்றுமதி என்பது அமெரிக்காவுக்கு தான் செய்யப்பட்டது. தற்போதைய கூடுதல் வரி விதிப்பால் அமெரிக்காவுக்கான நகை, ரத்தினக் கற்களின் ஏற்றுமதி என்பது பெருமளவு சரிய தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் உடனடியாக இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கான நகை, ரத்தினக்கற்கள் ஏற்றுமதி என்பது இந்தியாவில் இருந்து 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறையலாம் என்கின்றனர் தொழில்துறை நிபுணர்கள். அதையும் மீறி கூடுதல் வரிகளுடன் அமெரிக்காவிற்கு நம் நாட்டின் நகை, ரத்தினக்கற்கள் ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் அங்கு அதன் விலை என்பது அதிகரிக்கும். இதனால் அமெரிக்க மக்கள் அதனை வாங்குவதை தவிர்க்கலாம். இதனால் நகை தேக்கம் என்பது ஏற்படும். இதனால் இந்தியாவின் நகை, ரத்தினக்கற்களை இயல்பாகவே அமெரிக்க வியாபாரிகள் புறக்கணிக்கலாம்.
இது நடக்கும் பட்சத்தில் நம் நாட்டில் வேலையிழப்பு என்பது ஏற்படும். அமெரிக்க ஏற்றுமதியை நம்பி இயங்கும் தொழிலதிபர்கள் தங்களிடம் பணி செய்யும் ஆட்களை குறைக்கலாம். வைரம் வெட்டுவது, வைரத்தை பட்டை தீட்டுதல், நகை தயாரிப்பு உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோர் பணியை இழ்கலாம். இதனால் பணியாளர்கள், தொழிலாளர்கள் என்று ஏராளமானவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் நகை மற்றும் ரத்தினக்கற்கள் தொழில் குறித்து இந்தியா அமெரிக்க பிரதிநிதிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை என்பது எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications