அமெரிக்க வரி.. மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கை தோல்வியா? புதிய அத்தியாயம் தொடக்கமா?
டெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% அளவுக்கு வரியை விதித்திருக்கிறது. இந்த பிரச்சனைக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது. சிலர் மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையில் ஏற்பட்ட தோல்வி இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். சிலர் உலகளாவிய வர்த்தகத்தின் மற்றொரு தொடக்கம் இது என்று சொல்கிறார்கள்.
உண்மையில் என்ன நடந்தது? மத்திய அரசு இதை எப்படி சரிகட்ட போகிறது என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

வெளியுறவுத்துறை கொள்கையில் தோல்வி:
பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, வெளியுறவுத்துறை விஷயத்தில் இந்தியாவின் பெயர் பயங்கரகமாக அடிவாங்கியிருக்கிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பினர் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்றனர்.
இந்த கொடூரத்திற்கு ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருந்தது. அதற்கு பாகிஸ்தானும் பதில் தாக்குதலை நடத்திய நிலையில், இரு தரப்பு போரை நிறுத்தியதாக அமெரிக்காவிலிருந்து அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்தியா தொடங்கிய ஆபரேஷனை அமெரிக்க அதிபர் எப்படி நிறுத்த முடியும்? நம்முடைய விஷயத்தில் மூன்றாம் நாடுகளின் தலையீடு எப்படி சாத்தியம்?
கோட்டை விட்ட மத்திய அரசு
அதேபோல இந்த தாக்குதல் நடந்து சில நாட்களில் பாகிஸ்தானுக்கான நிதி உதவியை ஐஎம்எஃப் வெளியிட்டது. ஐஎம்எஃப் நிர்வாகக் குழுவில் 24 நாடுகள் இருக்கின்றன. இந்தியா மட்டுமே பாகிஸ்தானுக்கான நிதி உதவியை எதிர்த்தது. மற்ற நாடுகளின் ஒத்தழைப்பை நம்மால் பெறமுடியவில்லை. பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் கொடுக்கும் கடனை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. இது தவிர, ஈரான் பிரச்சனையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கையெழுத்து போடாதது, பாலஸ்தீன பிரச்சனையில் மௌனம் காப்பது உள்ளிட்டவை மத்திய அரசு வெளியுறவுத்துறை கொள்கையில் கோட்டை விட்டிருப்பதற்கான உதாரணம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
மற்றொரு வாய்ப்பு
மற்றொருபுறம், இந்த பிரச்சனையை சமாளிக்க நமக்கு வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிறது. இதை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ளப்போகிறோம் என்பதுதான் கேள்விக்குறி. பிரிக்ஸ் அமைப்பின் அடுத்த ஆண்டு தலைமை இந்தியதான். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரிக்ஸ் நாடுகளுடனான பொருளாதார உறவை மத்திய அரசு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதார தடையை உடைக்க முடியும் எனவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா பாலமா?
ஆனால் இந்த ஆண்டு பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒற்றை தலைமை என்கிற ரீதியில் வார்த்தைகளை விட்டிருந்தார். பிரிகஸ் அமைப்பில் யாரும் தலைவர்கள் கிடையாது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் பிரிக்ஸ் கூட்டம் நடக்கிறது. எனவே தலைவர்கள் அனைவரும் கூட்டு முயற்சியைதான் முன்னெடுப்பார்கள். ஆனால் பிரதமர் மோடி, கிழக்குக்கும், மேற்குக்கும் இந்தியா பாலமாக செயல்படும் என்று கூறியிருந்தார்.
நிபுணர்கள் எச்சரிக்கை
அதாவது மேற்கில் உள்ள அமெரிக்காவுக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும் இடையேயான பஞ்சாயத்தை நான் முடித்து வைப்பேன் என்கிற டோனில் அவரது பேச்சு இருந்தது. இதை மற்ற பிரிக்ஸ் நாடுகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. இப்போதைய சூழலில் ஒன்று அமெரிக்கா சார்பில் இருக்க வேண்டும், இல்லையெனில் பிரிக்ஸ் பக்கம் இருக்க வேண்டும். இரண்டுமாக இருப்பது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனாலும், பிரிக்ஸ் மூலம் இந்தியா தன்னை முழுமையாக மீட்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதை எப்படி மத்திய அரசு பயன்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications