அமெரிக்காவில் கொலை முயற்சியில் தப்பிய பயங்கரவாதி குர்பத்வந்த்சிங் பன்னூன்- இந்தியா மீது சந்தேகம்?
டெல்லி: அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த்சிங் பன்னூன் மீதான கொலை முயற்சி சதி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் இந்த விவகாரத்தில் இந்தியாவை அமெரிக்கா எச்சரித்ததாகவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் தேடப்படுகிற காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் பயங்கரவாதிகள், கனடா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்தபடியே இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீக்கிய தீவிரவாத குழுக்களிடையேயான மோதல்களில் இந்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். கனடாவில் சீக்கிய தீவிரவாதி நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இந்தியாதான் ஏஜெண்டுகள் மூலம் நிஜ்ஜாரை போட்டுத்தள்ளியதாக கனடா புகார் தெரிவிக்க பெரும் பிரச்சனை வெடித்தது. இதனால் கடந்த பல மாதங்களாக இந்தியா- கனடா உறவு சீர்குலைந்து போனது.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் மற்றொரு சீக்கிய பயங்கரவாதி குர்பத்வந்த்சிங் பன்னூன் மூலமாக இந்தியாவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மிரட்டல் விடுத்து வருபவர் குர்பத்வந்த்சிங் பன்னூன். அண்மையில் ஏர் இந்தியா விமானங்களைத் தகர்க்க போவதாகவும் மிரட்டியிருந்தார் குர்பத்வந்த்சிங் பன்னூன். இந்த பயங்கரவாதியுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரது சொத்துகளை முடக்கினர். இப்போதும் பஞ்சாப், ஹரியானாவில் குர்பத்வந்த்சிங் பன்னூன் கூட்டாளிகளை என்.ஐ.ஏ. வலை வீசி தேடுகிறது.
இந்த குர்பத்வந்த்சிங் பன்னூனை அமெரிக்காவில் கொலை செய்ய மர்ம நபர்கள் முயற்சித்ததாகவும் அதை அமெரிக்காவின் உளவு அமைப்பு தடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படுகொலை முயற்சியை இந்தியாதான் மேற்கொண்டதாகவும் ஜோ பிடன், பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததாகவும் ஊடகங்கள் தற்போது செய்திகளை வெளியிட்டுள்ளன. தற்போது இந்த கொலை முயற்சி தொடர்பாக அமெரிக்கா வழக்கும் பதிவு செய்திருக்கிறதாம். நியூயார்க் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விரைவில் விளக்கம் அளிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications