’செம்படை’ சீனா மெகா 'சேட்டை’- இந்தியாவை மிரட்ட இலங்கையில் பிரம்மாண்ட கடற்படை தளம்- யு.எஸ். வார்னிங்!
டெல்லி: இந்தியாவை மிரட்டுவதற்காக இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மிகப் பிரம்மாண்டமான கடற்படை தளத்தை சீனா அடுத்த 2 அல்லது 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கும் என அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகம் பாதுகாப்பு விவகாரங்களில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது. அம்பந்தோட்டா துறைமுகமானது இலங்கையால் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து சீனாவின் சுயாட்சி பிரதேசம் அல்லது காலனி பிரதேசம் போல அம்பந்தோட்டா துறைமுக பகுதிகள் சீனா வசமாகிவிட்டது. இந்திய பெருங்கடல், வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலானது சீனாவின் இந்த நடவடிக்கை என ஏற்கனவே பல்வேறு முறை எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

123 துறைமுகங்களில் சீனா: இந்நிலையில் AidData என்ற அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. AidData-ன் ஆய்வு அறிக்கையின்படி, சீனாவானது உலகம் முழுவதும் 2001 முதல் 2021 வரையில் மொத்தம் 123 துறைமுக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களுக்கு 29.9பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 46 நாடுகளில் 78 துறைமுகங்களை விரிவுபடுத்தவும் சீனா நிதி உதவி செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பந்தோட்டாவில் சீனா கடற்படை தளம்: மேலும் சீனாவின் இந்த நடவடிக்கைகளிலேயே முதன்மையானது இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுக விரிவாக்கம்தான். இலங்கையின் அம்பாந்தோட்டாவில் சீனாவானது அடுத்த 2 அல்லது 5 ஆண்டுகளில் மிகப் பிரம்மாண்டமான கடற்படை தளத்தை அமைக்கப் போகிறது. இது இந்தியாவின் நலன்களுக்கு கவலை அளிக்கக் கூடியது எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அண்மைக்காலமாக அம்பந்தோட்டாவில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது எனவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.
எல்லாம் ராஜபக்சே செயல்: இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் ஆய்வாளர்கள், 2005-ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர்தான் இலங்கையானது சீனாவுடன் மிகவும் நெருங்கியது. 2014-ம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புவுக்கு வந்த போது இந்தியா கடுமையாக எதிர்த்தது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பை மீறி அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்துவிட்டது இலங்கை என்கின்றனர்.
இலங்கையும் இந்தியாவும்: இலங்கையில் அன்னிய நாடு ஒன்று கால் பதிப்பதை இந்தியா எப்போதுமே எதிர்த்து வந்துள்ளது. 1980களில் இலங்கையின் திருகோணமலையில் அமெரிக்கா வானொலி தளம் அமைக்க முயற்சித்த போது, நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் இலங்கையை பகிரங்கமாகவே மிரட்டி விட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக ஈழத் தமிழருக்கு இந்தியா ஆயுதமும் ஆயுத பயிற்சியும் கொடுத்தது. ஆனால் ராஜீவ் காந்தி பிரதமரான பின்னர், அரசியல் தலைமைகளுக்கு பதில் இந்திய அதிகாரிகள் குழு, வெளிவிவகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக உருமாறின. இதனால் இலங்கை மீதான இந்தியாவின் பிடி முற்று முழுதாக விலகியது. இதனையடுத்து இலங்கையின் கதவுகள் சீனாவுக்கு திறந்துவிடப்பட்டன. இலங்கைக்கு கடன் வழங்குகிறோம் என்ற பெயரில் இலங்கையின் துறைமுகம் உள்ளிட்ட நிலப்பகுதிகளை சீனா மெல்ல மெல்ல விழுங்கி வருகிறது. இதன் அடுத்த கட்டமாகத்தான் இந்தியாவை அச்சுறுத்தும் வகையிலான மிகப் பிரம்மாண்டமான கடற்படை தளத்தை அம்பாந்தோட்டா துறைமுகத்தில் சீனா மேற்கொள்ள இருக்கிறது என்கின்றனர் இலங்கை மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications