கண்ணை மறைத்த காதல்.. காதலியை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்தியருக்கு நேர்ந்த கதி.. எல்லாமே போச்சு
டெல்லி: சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் காதலியை பார்க்க பாகிஸ்தான் சென்ற உத்தர பிரதேச இளைஞரை அந்த நாட்டு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக எல்லை தாண்டி பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் நாக்லா காத்காரி கிராமத்தை சேர்ந்தவர் பாதல் பாபு (வயது 30. இவருக்கு சமூக வலைதளம் ஒன்றின் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இருவரும் நண்பர்களாக பழகின்றனர்.

அதன்பிறகு இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் சமூக வலைதளம் மூலம் பேசி கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் பாதல் பாபுவுக்கு தனது காதலியை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து காதலியை பார்க்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் இந்தியா- பாகிஸ்தான் எல்லையை கடந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாண்டி பஹதூன் சிட்டிக்கு டிசம்பர் 27 ம் தேதி சென்றார். அங்கு அவரை பாகிஸ்தான் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் வெளிநாட்டினருக்கான சட்டம் 1946 பிரிவு 13, 14 ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு பாதல் பாபு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 14 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் அவர் ஜனவரி 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். முன்னதாக கைதான பாதல் பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல் அதிர வைத்தது. அதாவது பாதல் பாபுவின் காதலி பாகிஸ்தானில் உள்ளார். அவரை பார்க்க ஏற்கனவே 2 முறை எல்லை தாண்ட அவர் முயற்சித்துள்ளார். ஆனால் அந்த முயற்சி கைக்கூடாத நிலையில் இப்போது 3வது முறையாக முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பாதல் பாபு அவரது காதலி மாண்டி பஹாதூன் நகரில் வசித்து வரும் நிலையில் அவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு தற்போது போலீசில் சிக்கி உள்ளார். இருப்பினும் போலீசாருக்கு பாதல் பாபு மீது சந்தேகம் உள்ளது. அவர் தனது காதலியை பார்க்க எல்லை தாண்டிவந்தாரா? இல்லாவிட்டால் பின்னணியில் வேறு ஏதேனும் விஷயம் உள்ளதா? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. இருநாடுகள் இடையே பொதுமக்கள் பயணிக்க நினைத்தாலும் கூட விசா கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் எல்லை தாண்டி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும், நம் நாட்டை சேர்ந்த சச்சின் மீனா என்பவருக்கும் பப்ஜி விளையாட்டின் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு காதலாக மாறிய நிலையில் சீமா ஹைதர் இந்தியா வந்தார்.
அதேபோல் இக்ரா ஜீவானி என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு லுடோ விளையாட்டின் மூலம் நம் நாட்டை சேர்ந்த முலாயம் சிங் யாதவ் என்ற 21 வயது இளைஞருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இக்ரா ஜீவானி எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தார். அந்த வகையில் தான் தற்போது பாதல் பாபு தனது காதலியை பார்க்க பாகிஸ்தான் சென்ற அங்குள்ள போலீசிடம் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications