ஜெகன் இருக்க வேண்டியது இந்தியா கூட்டணியில்தான்.. டெல்லி போராட்டத்தில் நேரில் அழைத்த திருமாவளவன்!
டெல்லி: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம்- பாஜக- ஜனசேனா கூட்டணி ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, ஜெகன் மோகன் ரெட்டி, இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் திருமாவளவன் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்றது முதலே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன என்பது புகார். ஒய்எஸ்ஆர் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டு, சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. புல்டோசர் மூலம் ஒய்.எஸ்.ஆர். தலைவர்கள் வீடுகள், கட்சி அலுவலகங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

இந்த அடக்குமுறைகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போட்டோ கண்காட்சியுடன் தர்ணா போராட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி இன்று நடத்தினார். இந்தப் போராட்டத்துக்கு "இந்தியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோரும் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய திருமாவளவன் எம்பி, ஆந்திராவில் நடைபெற்றுவரும் தாக்குதல்களை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். நீதிக்கான போராட்டத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கு எங்களது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் இந்தியா கூட்டணியில் இணையவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக விசிக எம்பி ரவிக்குமார் தமது எக்ஸ் பக்கத்தில், ஆந்திராவில் தெலுங்குதேசம் - பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள்மீது நடத்தப்பட்டுவரும் வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்து ஆந்திராவின் மேனாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திருமாவளவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். நானும் உடன் சென்றிருந்தேன். டெல்லி மாநில மேனாள் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவுமான ராஜேந்திரபால் கௌதம் எங்களோடு வந்திருந்தார். ஜெகன்மோகன், ஆந்திராவில் நடைபெற்றுவரும் தாக்குதல்களின் வீடியோவை எங்களுக்கு ஒளிபரப்பி அதைப்பற்றி விளக்கினார் என பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications