ஆச்சர்யம்! ஆனால் உண்மை.. வெறும் ஒன்றரை ரூபாய்க்கு பெட்ரோல் விற்கும் நாடு
டெல்லி: வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை (டெல்லியில்) இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்தியாவில் 83 ரூபாயைத் தாண்டிவிட்ட நிலையில் வெனிசுலா என்ற நாடு பெட்ரோலை ஒன்றரை ரூபாய்க்கு விற்று கொண்டுள்ளது.
இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து அதற்கு சுமார் 35 ரூபாய்க்கு மேல்வரியை போட்டு விற்று வரும் நிலையில் வெனிசுலா பெட்ரோல் விலையை அண்மைக்காலம் வரை வெறும் ஒன்றரை ரூபாய்க்கு விற்று வந்துள்ளது.
உலகிலேயே வெனிசுலாவில் தான் எண்ணெய் வளம் மிக அதிகமாக உள்ளது. ஆனால் அங்கேயே பெட்ரோல் விலை கடந்த மாதம் மிக மிக கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. சுமார் 25 மடங்கு பெட்ரோல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெட்ரோல் விலை ஒன்றரை ரூபாயில் இருந்து 37 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பபட்டுள்ளது.

ஒன்றரை ரூபாய்க்கு
இந்த விலை உயர்வு அந்த நாட்டு மக்களை கடுமையாக பாதித்துள்ளதால் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதற்கு மத்தியில் வெனிசுலா அரசு . மக்களின் நலன் கருதி சலுகை விலையில் மாதம் 120 லிட்டர் பெட்ரோலை ஒன்றரை ரூபாய் விலைக்கு தருகிறது. பைக் வைத்துள்ளவர்களுக்கு ஒன்றரை ரூபாய் விலையில் மாதம் 60 லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தேவை என்றால் ஒரு லிட்டருக்கு 37 ரூபாய் 50 காசு கொடுத்தாக வேண்டும்.

நிர்வாக கோளாறு
உலகிலேயே அதிக எண்ணெய் வளம் இருந்தும் வெனிசுலாவில் திடீரென பெட்ரோல் விலை அதிகமானதற்கு முக்கிய காரணம் அந்நாட்டில் நிலவும் நிர்வாக கோளாறுகள் ஆகும. எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் வெறும் 20 சதவீதமே செயல்படுவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வெனிசுலாவுக்கு ஈரான் கை கொடுத்து உதவுகிறது. அமெரிக்காவின் தடையை மீறி ஈரான் வெனிசுலாவிற்கு உதவி வருகிறது.

பொருளாதாரம் பாதிப்பு
வெனிசுலாவில் பெட்ரோல் விலை திடீரென கடுமையாக உயர்ந்ததால் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். அதிக எண்ணெய் வளம் வைத்து இருந்தும் நிர்வாக கோளாறால் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு வெனிசுலா தள்ளப்பட்டுள்ளது.
Recommended Video

10 ரூபாய் உயர்வு
ஒன்றரை ரூபாய்க்கு ரேசன் முறையில் வெனிசுலா பெட்ரோல் விற்று வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த 10 நாட்களில் சுமார் 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து 83.18 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை 52 பைசா உயர்ந்து 77 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications