இந்தியாவில் மிக மோசமான உச்சம் தொட்ட கொரோனா- ஒரே நாளில் 9,971 பேருக்கு பாதிப்பு-உலக அளவில் 6-வது இடம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனாவின் கொடூர தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில் மொத்தம் சுமார் 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கையோ 4 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கூட 34 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியா 6-வது இடம்
உலக நாடுகளில் அமெரிக்காதான் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டுகிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையோ 1 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது.

24 மணிநேர நிலவரம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 24 மணிநேரத்தில் 287 பேர் மரணமடைந்தும் உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 246628 ஆக அதிகரித்திருக்கிறது, அதேபோல் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் எண்ணிக்கை இந்தியாவில் 6929 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகம்
இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,19,293 ஆகவும் உயர்ந்திருக்கிறது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,20,406 ஆக உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவில் மிக மோசமான பாதிப்பு நீடிக்கிறது. மகாராஷ்டிராவில் 1,20,406 பேரும் தமிழகத்தில் 30,172 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா மரணங்களில் குஜராத் 2-வது இடம்
3-வது இடத்தில் டெல்லி மாநிலம் உள்ளது. டெல்லியில் 27,654 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குஜராத்தில்தான் இந்திய அளவில் 2-வது இடத்தில் கொரோனா மரணங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் 2,969 பேரும் குஜராத்தில் 1219 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் 4, 5-வது இடங்களில் ராஜஸ்தானும் உத்தரப்பிரதேசமும் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications