டெல்லியில் மீண்டும் வெடித்தது விவசாயிகள் போராட்டம்! மோடி அரசை விமர்சித்த துணை ஜனாதிபதி
டெல்லி: வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் ஏன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக உ.பி. பாஜக அரசும் அறிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன.
மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தினர். கடும் குளிர், கொட்டும் பனி, வெயில் இடையே ஓராண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இறுதியாக மத்திய பாஜக அரசு தமது 3 வேளாண் சட்டங்களை கைவிடுவதாக அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்பு கோரினார்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போது வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு அப்போது வழங்கியது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் விவசாயிகள் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வலியுறுத்தி உள்ளார். மேலும் உத்தரப்பிரதேச மாநில அரசும் 5 வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்திலும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications