பதவியேற்பு கோப்பில்.. பிள்ளையார் சுழி போட்டு கையெழுத்து போட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட, தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து அவர் இன்று பதவியேற்றார். பதவியேற்பு கோப்பில் பிள்ளையார் சுழி போட்டு பின்னர் கையெழுத்திட்டிருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நலக்குறைவு மற்றும், மருத்துவ காரணங்களுக்காக திடீரென கடந்த ஜூலை 21ம் தேதி ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி.சுதர்சன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் பலர் பங்கேற்றிருந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கான கோப்பில் பிள்ளையார் சுழி போட்ட பின்னர் ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் பாஜகவினரால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
வழக்கமாக பாஜகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள், கடவுளின் பெயரால் பதவியேற்றுக்கொள்கின்றனர். இதில் சில முற்போக்கு தலைவர்கள் உண்மை மற்றும் சத்தியத்தின் பெயரால் பதவியேற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில், ராதாகிருஷ்ணனும் கடவுளின் பெயரால் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.
இந்துக்களின் பாரம்பரியப்படி, பிள்ளையார் சுழி போட்டு ஒரு விஷயத்தை தொடங்குவதன் மூலம், அந்த விஷயம் சிறப்பானதாக நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எனவே இதன்படித்தான் ராதாகிருஷ்ணனும் பிள்ளையார் சுழி போட்டு கையெழுத்திட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications