கெத்தாக பறந்து வந்த தேஜாஸ்.. கழுகைப் போல் சீறி வந்து 8 போட்ட ரபேல். மரண மாஸ் காட்டிய இந்தியா
டெல்லி: இந்திய விமானப்படை விமானங்களின் சாகசத்தில் தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்கள், ரபேல் போர் விமானங்கள் பங்கேற்றன. இந்த விமானங்களின் சாகச காட்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
இந்திய விமானப்படையின் 88ம் ஆண்டு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியை அடுத்த் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி பதூரியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

விமானப்படை தளபதி
இதில் முதலில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. இதை விமானப்படை தளபதி பதூரியா பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில் நாட்டின் இறையாண்மையையும் நலன்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க விமானப்படை எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

வட்டமடித்து சாகசம்
அதன் பின்னர் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. இதில் முதலில் அதிக எடை உள்ள ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பறந்து சாசகம் செய்தன. வானில் வட்டமடித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

8 போட்ட ரபேல்
இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக ரபேல் பங்கேற்றது. கழுகைப் போல் ரபேல் விமானம் சீறியபடி பறந்து சாகசம் செய்தது. ஹாக்கி ஸ்டேடியத்தின் அளவை விட குறைந்த பகுதியில் ரபேல் விமானம் லாவகமாக சுழன்று, 8 வடிவத்தை உருவாக்கி சாசகம் செய்தது. இதை கண்டு பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.

ஹிண்டன் விமானப்படை தளம்
தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்களும் அணிவகுப்பில் வரிசையாக பறந்து சாகசம் நடத்தின. இது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. விமானப்படை தினத்தையொட்டி ஹிண்டன் விமானப்படை தளம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications