சமூக விலகலுக்கு கோவிந்தா.. கொரோனா கோஷம் போட்டு ஊர்வலமாக போன மக்கள்.. அதிர்ச்சி
டெல்லி: ஊரடங்கு உத்தரவு, சமூக விலகலை கடைப்பிடிக்க நாடு முழுவதும் பாடுபட்டு வரும் நிலையில் விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் கூறியதை தவறாக புரிந்து கொண்டு கூட்டம் கூட்டமாக மக்கள் டார்ச் லைட்களை ஏந்திய படி செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. இதனால் மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனாவை தடுக்க மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே வருகிறார்கள். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி தண்டனை கொடுத்து வருகிறார்கள்.

தன்னார்வலர்கள்
மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக பாடுபடுகிறது. அதிலும் மாவட்ட நிர்வாகத்தினர் கடுமையாக உழைக்கிறார்கள். தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் காய்கறிகளை சில மாவட்டங்களில் உள்ள நிர்வாகத்தினர் வீடுகளுக்கே சென்று கொடுத்து வருகிறார்கள். இதில் சில தன்னார்வலர்களும் அடங்குவர்.
|
வீடியோ
இந்த நிலையில் கொரோனா எனும் இருளை அகற்ற ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்குளை அணைத்து வைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்றுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அது போல் டார்ச் லைட், செல்போன் டார்ச் லைட்டையும் காண்பிக்கலாம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

டார்ச் லைட்
அதில் நேற்று இரவு விளக்குகளை அணைத்தவுடன் டார்ச் லைட்களை எடுத்து கொண்டு ஏதோ புரட்சி செய்ய கிளம்புவது போல் மக்கள் அலை அலையாக புறப்பட்டனர். சமூக பரவலை தடுக்க சமூக விலகல் அவசியம் என்பதை மறந்து பிரதமரின் அறிவுறுத்தலை தவறாக புரிந்து இப்படி படையெடுத்த மக்களை என்னவென சொல்வது?

விஷயம்
நாட்டு மக்கள் கொரோனாவிலிருந்து தப்புவதற்காக சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரும் தங்கள் வீடு, குடும்பத்தினரை மறந்து பசி, பட்டினியுடன் போராடி வருகிறார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா விஷயத்தையும் கொண்டாடுவதா?

விழா
இதே போல் கடந்த 22-ஆம் தேதி ஒரு ஊரடங்கின் போது மாலை 5 மணிக்கு சுகாதாரத் துறையினரின் சேவைகளைப் பாராட்டி அனைவரும் வீடு வாசல், ஜன்னல், பால்கனிகளில் நின்று கொண்டு கரகோஷம் எழுப்ப வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து மாலை 5 மணிக்கு அவரவர் வீட்டுக்குள் இருந்தவாறே செய்தனர். ஆனால் பலர் இதை விழாபோல் கும்பல் கூடி கொண்டாடி சமூக விலகலை நீர்த்து போக செய்தனர்.












Click it and Unblock the Notifications