'நரகத்தில் வாழ்கிறோம், உதவ முடியவில்லை..' கருப்பு பூஞ்சை மருந்து தட்டுப்பாடு.. டெல்லி ஐகோர்ட் வேதனை
டெல்லி: கருப்பு பூஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் மருந்து தட்டுப்பாடு குறித்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், நாம் தற்போது நரகத்தில் வாழ்கிறோம் என்றும் மருந்து இறக்குமதி செய்யத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்தியாவில் தற்போது தான் கொரோனா பரவலின் 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. ஆனால், அதேநேரம் கொரோனாவுக்கு பின் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாட்டில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் ஸ்டீராய்டுகள் அளிக்கப்படுவதால், அவர்களில் உடல் பலவீனமாவதாகவும், இதனால் அவர்களில் எளிதில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மருந்திற்குத் தட்டுப்பாடு
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இரு நோயாளிகளுக்கு மருந்து கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் மல்ஹோத்ரா, கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் Liposomal Amphotericin-B மருந்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போது வெளிநாடுகளிலிருந்து 2.3 லட்சம் கருப்பு பூஞ்சை மருந்துகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
எப்போது வரும்
2.3 லட்சம் கருப்பு பூஞ்சை மருந்துகள் மட்டும் போதும் என மத்திய அரசு எப்படி முடிவு செய்தது, அவை தற்போது எங்கு உள்ளது, எந்த நிலையில் உள்ளது, அவை எப்போது இந்தியாவுக்கு வரும், முதலில் இந்த மருந்துகளுக்கு மத்திய அரசு ஆர்டர் அளித்துவிட்டதா என அடுக்கடுக்கான கேள்விகளை டெல்லி உயர் நீதிமன்றம் எழுப்பியது. அப்போது மருந்திற்கு ஏற்கனவே ஆர்டர் அளிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. கடந்த மே 24ஆம் தேதிஆர்டர் அளிக்கப்பட்டிருந்தால், இந்நேரம் மருந்துகள் வந்திருக்கும் என்றும் நாமக்கு குறுகிய காலம் உள்ளதால் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நரகத்தில் வாழ்கிறோம்
மேலும் நீதிபதிகள் கூறுகையில், "நாம் இப்போது நரகத்தில் வாழ்கிறோம். நாம் அனைவருமே இந்த நரகத்தில்தான் இப்போது வாழ்கிறோம். தற்போது நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் நாங்கள் உதவ விரும்புகிறோம். ஆனால், நாங்கள் உதவ முடியாத நிலையில் உள்ளோம். இந்த நோய் ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது. நாம் வேகமாகச் செயல்பட வேண்டும். மருந்துகளின் இறக்குமதி குறித்த விரிவான அறிக்கையை வரும் திங்கள்கிழமை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
எத்தனை பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு
முன்னதாக நீதிமன்றத்தில் Amphotericin B மருந்து தேவை எப்படிக் கணக்கிடப்பட்டது என்பதை மத்திய அரசு விளக்கியது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 20% பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 1:500 அல்லது 1:1000 பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.