"இந்திய மகள்களின் எதிர்காலத்தை சூறையாடுகிறோம்!" ஹிஜாப் விவகாரம் பற்றி ராகுல் காந்தி ஆதங்கம்
டெல்லி: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்திய மகள்களின் எதிர்காலத்தை சூறையாடுகிறோம் என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை கல்லூரி நிர்வாகம்.
கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு, உடுப்பி பகுதியில் உள்ள கல்லூரிகளில் இயங்கி வரும் இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, காவி துண்டு அணிந்து வந்தனர்.
ஹிஜாப் எங்க உரிமை.. அவங்களை விடலைனா நாங்க வரமாட்டோம் -மாணவிகளுக்கு ஆதரவாக குதித்த இஸ்லாமிய மாணவர்கள்
ஹிஜாப்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை. மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ அமைப்பான ஏபிவிபி இயக்கத்தினர் கல்லூரிக்கு காவித்துண்டு அணிந்து வந்தனர். அவர்கள் ஹிஜாப் அணியக்கூடாது, இல்லையென்றால் நாங்களும் இப்படித்தான் கல்லூரிக்கு வருவோம் என்றனர். இதையடுத்து இதேபோன்ற சம்பவம் சிக்மங்களூர் கல்லூரியிலும் தற்போது நடந்துள்ளது.
மாணவிகள்
உடுப்பி கல்லூரியில் 6 மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்ததால், அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதியில் இருந்து இவர்கள் "ஆப்சென்ட்" என்று வகுப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கட்டுப்பாடு இன்னும் சில பியூ கல்லூரிகளிலும் போடப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடகாவில் இருக்கும் பியூ கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Recommended Video
எதிர்ப்பு
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வாசலிலேயே தடுத்து நிறுத்தியது. ''சார் எங்களை உள்ளே விடுங்க.. எங்க படிப்பு கெடுது..'' என்று மாணவிகள் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஹிஜாப் விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''மாணவர்களின் கல்விக்கு ஹிஜாப் இடையூறாக வர வேண்டாம். ஹிஜாப் விவகாரத்தால், இந்திய மகள்களின் எதிர்காலத்தை நாம் சூறையாடுகிறோம். சரஸ்வதி தேவி அனைவருக்கும் அறிவை வழங்குகிறாள், அவள் வேறுபடுத்துவதில்லை'' என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர்.