வேக்சின் இல்லாமல் அறிவிப்பு மட்டும் ஏன்.. தடுப்பூசி கொள்கையே எங்களுக்கு புரியவில்லை.. டெல்லி ஐகோர்ட்
டெல்லி: கொரோனாவால் அதிகம் உயிரிழக்கும் இளைய தலைமுறையினருக்கே தடுப்பூசி அளிப்பதில் முக்கியதும் அளிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், அதன் பிறகு 60 வயதைக் கடந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.
கொரோனா பரவல் உச்சமடைந்ததைத் தொடர்ந்து மே 1ஆம் தேதி முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இருப்பினும், பற்றாக்குறை காரணமாக இந்தப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக உள்ளது.

முதியவர்களுக்கு முன்னுரிமை
இந்நிலையில், கருப்பு பூஞ்சை மருந்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சங்கி கூறுகையில், "கொரோனாவால் இளைஞர்கள் அதிகளவில் உயிரிழந்தனர். ஆனால், மத்திய அரசு தடுப்பூசி பணிகளில் முதியவர்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்தது" எனத் தெரிவித்தனர். அதேநேரம் நேரம் தங்கள் கருத்தை வயதானவர்களின் உயிர் முக்கியமில்லை என எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.

புரிந்துகொள்ள முடியவில்லை
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஒரு குடும்பத்திற்கு முதியவர்கள் அளிக்கும் ஆதரவை ஒருபோதும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், நாட்டில் இளைஞர்கள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெற முடியவில்லை. மத்திய அரசு தடுப்பூசி கொள்கைகளை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

போதிய தடுப்பூசி இல்லாமல் அறிவிப்பு
அதன் பிறகு 18-44 வயதுடையவர்கள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளலாம் என அறிவித்தீர்கள். ஆனால், உங்களிடம் போதிய தடுப்பூசிகள் இல்லை. உங்களிடம் போதியளவில் தடுப்பூசி இல்லாதபோது அறிவிப்பை மட்டும் ஏன் வெளியிட்டீர்கள். இளைஞர்களின் எதிர்காலத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். ஆனால், மாறாக அவர்களை நாம் திக்கு தெரியாத திசையில் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

இளைஞர்களுக்கு முன்னுரிமை
நாட்டிலுள்ள அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இதேபோன்ற ஒரு நெருக்கடியான நிலை வரும்போது, நாம் ஒரு தரப்பைத் தேர்வு செய்ய வேண்டும். 60 வயதைக் கடந்தவர்கள், ஏற்கனவே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடிந்துவிட்டார்கள். இளைஞர்களுக்கு நீண்ட ஒரு எதிர்காலம் உள்ளது. எனவே நாம் அவர்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தாலி அரசு
மேலும் மத்திய அரசு இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் எவ்வித தயக்கமும் காட்டக் கூடாது எனக் குறிப்பிட்ட நீதிபதி சங்கி, இத்தாலி போன்ற நாடுகள் கூட இளைஞர்களுக்கே முன்னுரிமை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கொரோனாவால் அதிகளவில் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்

கடவுள் எப்படி உதவுவார்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் 'கடவுள்தான் நமக்கு உதவ வேண்டும்' என மத்திய அரசின் ஆலோசனைக் குழு தெரிவித்திருந்தது. இது குறித்து நீதிபதி கூறுகையில், "நமக்கு நாமேதான் உதவ வேண்டும். இதுகூட முடியவில்லை என்றால், கடவுள் எப்படி நமக்கு உதவுவார்? அவரால் கூட உதவமுடியாது" என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications