மணிப்பூர்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயார்- எதிர்க்கட்சிகள் மீது பியூஷ் கோயல் சாடல்!
டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர கோரி எதிர்க்கட்சிகள் இன்றும் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கின. ஆனால் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என ராஜ்யசபா சபை முன்னவர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மணிப்பூரில் 3 மாதங்களாக தொடர் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை கடந்த 7 நாட்களாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடக்கினர். இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா கூடின. அப்போது இரு சபைகளிலும் பிரதமர் மோடி சபைக்கு வந்து விளக்கம் தர வேண்டும் என எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனையடுத்து லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. ராஜ்யசபா நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
முன்னதாக ராஜ்யசபாவில் பேசிய சபை முன்னவர் பியூஷ் கோயல், மணிப்பூர் நிலவரம் தொடர்பாக இன்று பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்களுக்கான சுதந்திரத்தை தவறுதலாக பயன்படுத்துகின்றனர். மணிப்பூர் பிரச்சனை குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகத்தான் இருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை 9 நாட்களாக வீணடித்துவிட்டனர் எதிர்க்கட்சி எம்பிக்கள் என்றார்.












Click it and Unblock the Notifications