பிரதமர் மோடிக்கு ‛செக்’.. ராகுலை காங்கிரஸ் தலைவராக்க விரும்பினோம்.. ரகசியம் உடைத்த அசோக் கெலாட்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்றுள்ள நிலையில், ‛‛ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஏனென்றால் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தியால் மட்டுமே சவால் விடுக்க முடியும். பாரத் ஜோடோ யாத்திரை மூலம் ராகுல் காந்தி மெசேஜ் அனுப்பி வருகிறார்'' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பகிரங்கமாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் அக்டோபர் 19ல் எண்ணப்பபட்டு முடிவுகள் வெளியாகின.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் தோல்வியடைந்தார்.
பதவியேற்ற நாளில் கார்கே அதிரடி.. 2 காந்திகள் உட்பட 47 காங்கிரஸ் வழிகாட்டு குழு உறுப்பினர்கள் நியமனம்
மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு
இந்த தேர்தலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நேற்று மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றார். டெல்லியில் நடந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவுக்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே உள்பட மூத்த தலைவர்கள் சோனியா காந்தியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தனர். மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சுர்ஜேவாலா, ஹரிஷ் ராவத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் உள்ளிட்டவர்கள் சென்றனர்.
உணர்ச்சிப்பூர்வமான தருணம்
இந்த சந்திப்புக்கு பிறகு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி ராஜினாமா செய்தது அனைத்து கட்சி தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். ஏனென்றால் சோனியா காந்தி அரசியலுக்கு வரும்போது அவரை எதிர்த்தவர்கள் அதன்பிறகு ஆதரவாளர்களாக மாறினர். பதவி விலகிய சோனியா காந்திக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
2 முறை மத்தியில் ஆட்சி
1998ல் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. மாநில அரசியலிலும் பல சவால்களை எதிர் கொண்டது. இருப்பினும் திறம்பட செயல்பட்டார். சோனியா காந்தியின் வழிகாட்டுதல் என்பது கட்சிக்கு விலைமதிப்பற்ற வகையில் உள்ளது. கடந்த 2004 மற்றும் 2009 ம் ஆண்டுகளில் பாஜகவை தோற்கடித்து மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடித்தது.
குடும்பம் போல் கட்சி
சோனியா காந்திக்கு பிரதமர் வாய்ப்பை துறந்து காங்கிரஸ் கட்சியை குடும்பம் போல் நடத்தினார். இந்த தியாகம், பாசத்தின் காரணமாக தான் அவரது தலைமையின் கீழ் கட்சி ஒன்றுபட்டு பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டது. சோனியா காந்தி தலைமையில் மத்தியில் 2 முறையும், 12 மாநிலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் ஆட்சியை பிடித்தது.
ராகுல் காந்தியால் மட்மே...
கட்சியில் ஜனநாயக முறையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது காங்கிரஸ் மற்றும் சோனியா காந்தி தலைமையில் மட்டுமே சாத்தியம். ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஏனென்றால் அவர் மட்டுமே பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தியால் மட்டுமே சவால் விடுக்க முடியும்.
பாரத் ஜோடோ யாத்திரை
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மூலம் பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மெசேஜ் அனுப்பி உள்ளார். அரசியல் என்பது அன்பு, பாசம் கலந்து இருக்க வேண்டும் எனவும், வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி மெசேஜ் அனுப்பி வருகிறார். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் பற்றியும் அவர் பேசி வருகிறார்.
கார்கேவுக்கு முழு ஆதரவு
காங்கிரஸ் கட்சி தலைவராக தற்போது மல்லிகார்ஜூன கார்கே தலைவராகி உள்ளார். அவர் முன்பு மிகப்பெரிய சவால் உள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முழு ஆதரவு கொடுக்கும். சோனியா காந்தி என்ன முடிவு எடுத்தாலும் அது மதிக்கப்படும். மேலும் அவரது கரங்களை வலுப்படுத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். தற்போது நாடு பெரிய சவால்களை எதிர்கொள்ளும் வேளையில் காங்கிரஸ் புதிய தொடக்கம் காண்கிறது'' என்றார்.
யார் இந்த அசோக் கெலாட்?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் அசோக் கெலாட். இவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால் அகில இந்திய தலைவர் தேர்தலில் அசோக் கெலாட்டை நிறுத்த சோனியா காந்தி முடிவு செய்தார். அவரும் ஒப்புக்கொண்டார். இருப்பினும் அவர் ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ் தலைவர் பதவியை ஒருசேர வைத்து கொள்ள முயன்றார். இதனால் ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கட்சி உடையும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து விலகி ராஜஸ்தான் முதல்வராக தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.