டெல்லி 'வெல் விஷர்ஸ்'.. அண்ணாமலை அப்படி.. கணக்கு இடிக்குதே? எடப்பாடி அவுட்டா? வெடி வைத்த தினகரன்!
சென்னை : டெல்லியில் இருந்து தன்னிடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் தினகரன்.
டெல்லியில் இருந்து சில நலம் விரும்பிகள், கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே கூட்டணிக்கு வருமாறு அழைத்தார்கள், அப்போது சில சுயநலவாதிகளால் அது முடியாமல் போனது.
இப்போதும் டெல்லியில் இருக்கும் அந்த நலம் விரும்பிகளுக்காகத்தான் கூட்டணி பற்றி பேசி வருகிறேனே தவிர, சுயநலவாதிக்காக அல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக தலைமை 2024 தேர்தலுக்கான கூட்டணியை அமைக்க இப்போதே வேகம் காட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதனை உறுதி செய்திருக்கிறார் டிடிவி தினகரன்.

டெல்லி - தினகரன் பேச்சு
பாஜக தலைமை, தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைக்க முயன்று வருகிறது. அதன்படி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கட்டாயம் தங்கள் கூட்டணியில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறது. இதுதொடர்பாக, இரு கட்சிகளிடமும் டெல்லியில் இருந்து முக்கிய புள்ளிகள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜகவின் விருப்பத்தை டிடிவி தினகரனும் ஏற்றுக் கொண்டிருந்தார். அதன்படியே, சமீபகாலமாக, திமுகவை வீழ்த்தும் அணியோடு கூட்டணி அமைப்போம் எனப் பேசி வந்தார்.

முறித்துப்போட்ட ஈபிஎஸ்
இந்நிலையில், தான் டிடிவி தினகரனின் விருப்பத்தை தட்டி விட்டு உடைத்தார் எடப்பாடி பழனிசாமி. மெகா கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 1% கூட இடம் கிடையாது என்று கூறியுள்ளார் ஈபிஎஸ். அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையத் தயார் என டிடிவி தினகரன் வெளிப்படையாகவே அறிவித்திருந்த நிலையில், அதற்கு 1% கூட வாய்ப்பில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்து, முட்டுக்கட்டை போட்டார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி எந்தக் கட்சி?
இந்நிலையில், இன்று சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அவர் எந்தக் கட்சி என்று அவரால் சொல்ல முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னத்தை கொடுக்க முடியும் என்பது தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது தேர்தல் வந்தால் எவ்வாறு அவரால் மெகா கூட்டணி அமைக்க முடியும்?

நாங்கள் சுதந்திரமான இயக்கம்
ஆனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சுதந்திரமான இயங்கக்கூடிய இயக்கம். நாங்கள் யார் உடனாவது கூட்டணி சேரமுடியும் என்றுதான் ஏற்கெனவே கூறியிருந்தேன். ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திமுகவை எதிர்க்க வேண்டும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அவ்வாறு செய்ய வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தேன். எடப்பாடி பேசுவதைப் பார்த்தால், அவர் ஜெயலலிதாவின் தொண்டரே இல்லை போலத் தெரிகிறது.

அரைக்கால்
மெகா கூட்டணி அமைப்போம் என்பவர்கள், அடுத்தவர்களை தரம்தாழ்த்தி பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றுதான் நான் கூறினேன். கால் சதவீதம் அல்ல அரைக்கால் சதவீதம்கூட பழனிசாமியுடன் கூட்டணிக்குச் செல்வேன் என்று நான் எங்கேயும் கூறியது இல்லை." என்றார்.

தலை இல்லாத முண்டம்
மேலும் பேசிய தினகரன், "அதிமுக கூட்டணிக்கு செல்வீர்களா என்ற கேள்வி தொடர்ந்து என்னிடம் கேட்கப்படுகிறது. இன்றைக்கு அதிமுக என்பது ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது. ஒரு கட்சி சின்ன கட்சியோ, பெரிய கட்சியோ, நாளைக்கே ஒரு இடைத்தேர்தல் வந்தால், அந்த கட்சி சார்பில் போட்டியிடுகிற வேட்பாளருக்கு சின்னம் கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். ஆனால், அங்கு நிலைமை என்ன? ரவீந்திரன் துரைசாமி வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், இன்றைக்கு அதிமுக தலை இல்லாத முண்டமாக உள்ளது.

விரக்தி
நான் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டியுள்ளது. என்னைத் தேவை இல்லாமல் இழுத்ததால், நான் அந்த வார்த்தையை சொல்ல வேண்டியுள்ளது. எனக்கு தெரிந்தவரை எடப்பாடி பழனிசாமி, விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அந்தக் கட்சி இன்று தலையில்லாத முண்டமாக இருப்பதால், மெகா கூட்டணி என்ற வார்த்தையைச் சொல்கிறார்.

எடப்பாடி ஜெ தொண்டர் இல்லையோ
அந்த கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது. நகர்ப்புற, ஊராட்சி தேர்தல்களில் போட்டியிட்டவர்களுக்கு படிவங்களைக் கூட அதிமுகவால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. அதனால்தான் சொல்கிறேன், அந்த கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. மீண்டும் சொல்கிறேன் திமுக என்ற தீயசக்தியை வீழ்த்த வேண்டும் என்றால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்." எனத் தெரிவித்தார்.

அணில் போல
மேலும், கூட்டணி பற்றிப் பேசிய தினகரன், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அமமுக ஒரு அணிலைப் போல செயல்படும். பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தமிழகத்தில் அமமுக சிறப்பாகப் பணியாற்றுவோம். முந்தைய தேர்தலில் நாங்கள் பின்னடைவைச் சந்தித்ததால் வருங்காலத்திலும் நாங்கள் பின்னடைவைத் தான் சந்திப்போம் என்று யாரும் நினைத்தால் அது அவர்களது எண்ணம். எங்கள் இயக்கம் சிறப்பாகச் செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி வெல் விஷர்ஸ்
டெல்லியில் இருந்து சில நலம் விரும்பிகள், கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே கூட்டணிக்கு வருமாறு அழைத்தார்கள்,. திமுகவை வீழ்த்தும் வகையில் செயல்பட அழைத்தார்கள். அப்போது சில சுயநலவாதிகளால் அது முடியாமல் போனது. இப்போதும் டெல்லியில் இருக்கும் அந்த நலம் விரும்பிகளுக்காகத்தான் கூட்டணி பற்றி பேசி வருகிறேனே தவிர, சுயநலவாதிக்காக அல்ல, தேர்தல் என்று வந்தால் கூட்டணி இல்லை என்றாலும், எங்கள் இலக்கை அடையும் வரை போராடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ் விட்டுக் கொடுப்பாரா?
மேலும் பேசிய அவர், பாஜக தலைவர் அண்னாமலை, பாஜக 25 சீட்களில் வெற்றி பெறும் என்கிறார். எனில் அதைவிட அதிக சீட்களில் நிற்க வேண்டும். அதிமுக தலைமையில் கூட்டணி என்று அண்ணாமலை சொன்னாரே தவிர எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்று சொல்லவில்லை. மெகா கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைவராக இருந்துகொண்டு, அத்தனை சீட்களையும் பாஜகவுக்கு விட்டுக்கொடுக்கப் போகிறாரா? தனித்து நிற்க தைரியமில்லாதவர் எடப்பாடி பழனிசாமி என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார் தினகரன்.












Click it and Unblock the Notifications