களேபரங்களுக்கு இடையே.. முடிந்த 2ஆம் கட்ட தேர்தல்.. அசாம், மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எவ்வளவு?
டெல்லி: அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் முறையே 77.2%, மற்றும் 82% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அரசின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது. இதனால் இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 47 தொகுதிகளில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாமில் நேற்று 77.2% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2016ஆம் 82.7% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அது தற்போது குறைந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 30 தொகுதிகளில் கடந்த 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது

மேற்கு வங்க முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நந்திகிராம் தொகுதியில் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் பாஜகவினர் தடுப்பதாக மம்தா பானர்ஜி புகார் அளித்துள்ளார். அதேபோல பதிலுக்கு பாஜகவும் திரிணாமுல் கட்சியினர் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் நேற்று 82.8% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2016ஆம் ஆண்டு பதிவான 87.1% வாக்குகளைவிடக் குறைவாகும்.












Click it and Unblock the Notifications