மேற்கு வங்கத்தில் 77 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு பதிவா? தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. இதில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 77 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வந்த நிலையில், மறுவாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பால்டா தொகுதியில் இருந்து 32 புகார்கள், டயமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து 29, மக்ராஹட் தொகுதியில் இருந்து 13 மற்றும் பட்ஜ் பட்ஜ் தொகுதியில் இருந்து 3 புகார்கள் என மொத்தம் 77 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு கோரிக்கைகள் வந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி கூறினார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினுடைய ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
இதன்படி மேற்குவங்கத்தில் முதல்கட்டமாக கடந்த 23 ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 93.19 சதவிகித வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஆனால் சில இடங்களில் மோதல், வன்முறையும் ஏற்பட்டது.
77 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு?
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்துமுடிந்த இந்த தேர்தலில் 92.67 சதவீத வாக்குகள் பதிவாகியது. மேற்கு வங்க தேர்தல் வரலாற்றில் சுதந்திரத்திற்கு பிறகு, இரண்டு கட்ட வாக்குப்பதியையும் சேர்த்து கிட்டத்தட்ட 93 சதவீத வாக்குகள் (92.93) பதிவாகி உள்ளது. இந்நிலையில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு, மோதல், முகவர்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியதால் போலீசார் கைது நடவடிக்கையினையும் மேற்கொண்டனர்.
முதல் கட்ட தேர்தல் அமைதியாக முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் பல்வேறு இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதி, சுவேந்து அதிகாரி போட்டியிடும் தொகுதிகளிலும் கூட மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் தான் 77 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன.
நாளை மறு வாக்குப்பதிவா?
குறிப்பாக பால்டா (Falta) தொகுதியில் இருந்து 32 புகார்கள், டயமண்ட் ஹார்பர் (Diamond Harbour) தொகுதியில் இருந்து 29, மக்ராஹட் (Magrahat) தொகுதியில் இருந்து 13, மற்றும் பட்ஜ் பட்ஜ் (Budge Budge) தொகுதியில் இருந்து 3 புகார்கள் என மொத்தம் 77 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு கோரிக்கைகள் வந்துள்ளது.
இதனையடுத்து தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 77 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வந்த நிலையில், மறுவாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
தேர்தல் அதிகாரி கூறுகையில், தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) முதலே நடத்தப்படலாம் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
பாஜகவே வெற்றி பெற வாய்ப்பு?
மேற்கு வங்கத்தில் கடந்த மூன்று முறை தொடர்ச்சியாக மம்தா பானர்ஜி வென்று ஆட்சியில் உள்ளார். இந்த முறையும் வெற்றி பெற்று 4-வது முறையாக ஆட்சியை பிடிப்பாரா? அல்லது பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை மேற்கு வங்கத்தில் பாஜக அதிக இடங்களை பெறும் என்று கணித்துள்ளன.














Click it and Unblock the Notifications