சிக்சர் அடித்த இந்தியா.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் டெல்லி ஜி20 மாநாடு.. 5 பாயிண்டுகள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இதில் முதல் நாளான நேற்று எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துப் பார்க்கலாம்.
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஜி20 தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் இப்போது இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் உச்சி மாநாடு இப்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகின் பல டாப் தலைவர்களும் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். இதனால் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்று ஜி20 மாநாடு தொடரும் நிலையில், முதல் நாளில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துப் பார்க்கலாம்.
ஜி20 மாநாடு: சர்வதேச அளவில் உலக நாடுகளுக்கு மத்தியில் நம்பிக்கை இல்லை என்றும் அதை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் வளைகுடா & அரபு நாடுகளை இணைக்கும் வகையிலான ரயில் மற்றும் கப்பல் இணைப்பு சங்கிலியை உருவாக்க எடுக்கப்பட்ட முடிவு எனப் பல முக்கிய விஷயங்கள் இதில் இடம்பெற்றன. இந்த ஜி20 உச்சி மாநாடு குறித்த 5 முக்கிய பாயிண்டுகளை பார்க்கலாம்.
1) இந்த ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் புதிய நிரந்தர உறுப்பினராக இணைக்கப்பட்டது. இது வளரும் நாடுகளுக்குச் சர்வதேச முடிவுகளை எடுப்பதில் அதிக பங்களிப்பை வழங்குகிறது. இது ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
2) முன்பே கூறியது போல அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் வளைகுடா & அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை இணைக்கும் விரிவான ரயில் மற்றும் கப்பல் இணைப்பு நெட்வொர்க் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இது அறிவிக்கப்பட்டபடியே செயல்படுத்தப்பட்டால், ஒட்டுமொத்தமாக உலக வர்த்தகத்தைப் புரட்டிப் போடும் திட்டமாக இது இருக்கும்.
3) இதில் டெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முக்கியமாகச் சீனா மற்றும் ரஷ்யா நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் சட்டத்தை நிலைநாட்டுமாறு இது உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. பாகிஸ்தான், கென்யா, ஜாம்பியா, லாவோஸ் மற்றும் மங்கோலியா போன்ற வளரும் நாடுகளை பெரும் கடனில் சிக்க வைத்துள்ள சீனாவின் பெல்ட் & ரோடு திட்டத்திற்கு இது மிக சிறந்த மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4) பயோ எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கச் சர்வதேச அளவில் பயோ எரிபொருள் கூட்டணியைத் தொடங்குவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். தாவரங்கள் மற்றும் விலங்கு கழிவுகள் மூலம் பயோ எரிபொருள் உற்பத்தி அதிகரித்து.. ஜீரோ கார்பன் எமிஷன் என்ற இலக்கை அடைய இந்த கூட்டணி உதவும்.
5) சர்வதேச அளவில் உலக நாடுகள் மத்தியில் நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இதில் கூறப்பட்டது. இதன் காரணமாக ஜி20 உறுப்பு நாடுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு தேவை என்றும் கோரப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications