டெல்லி எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்! சாலையில் ஆணி, தடுப்புகள்! விவசாயிகள் கோரிக்கைகள் தான் என்ன?
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லி எல்லைகளை அதிர வைத்துள்ள இந்த போராட்டத்தில் விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லிக்குள் நுழையும் விவசாயிகள் தடுக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

போலீசார் டிரோன்களை அனுப்பி அதில் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால் எல்லையில் இரு தரப்பிற்கும் இடையே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.
முக்கிய கோரிக்கை: இதில் முதன்மையானது விவசாய பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்யும் சட்டம். வெளியே மார்கெட்டில் விலை ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும். அதுபோன்ற சமயங்களில் விலை ரொம்ப குறைந்தால் அது விவசாயிகளுக்கு மிகப் பெரிய நஷ்டத்தைத் தரும். எனவே, இதில் இருந்து விவசாயிகளைக் காக்க மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்து முக்கியமானது 2020இல் கொண்டு வரப்பட்ட மின்சாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது.. மேலும்,லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.. அப்போது டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் இந்த போராட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தோல்வி: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது 2020-21 போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் குறித்து எதுவும் கூறவில்லை.. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் நிச்சயம் தேவை என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி மற்றும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சட்டரீதியான உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்க ஒரு குழுவை அமைக்கலாம் என்று மத்திய அரசு முன்மொழிகிறது. ஆனால், விவசாயிகள் இதை ஏற்கவில்லை. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளே இரண்டு ஆண்டுகள் நிறைவேற்றப்படாத நிலையில், குழு அமைப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது என்று விவசாய பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
பின்னணி: கடந்த 2021 நவம்பர் 19ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் ஆரம்பித்து சுமார் 13 மாதங்கள் கழித்தே அந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இருப்பினும், அதன் பிறகு 9 மாதங்கள் கழித்தே விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றுவதை ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டது. அதற்கான தலைவராக முன்னாள் வேளாண் செயலர் சஞ்சய் அகர்வால் நியமிக்கப்பட்டார். இந்த குழுவில் மொத்தம் 29 உறுப்பினர்கள் இருந்த நிலையில், அதில் நான்கு பேர் மத்திய அரசு செயலாளர்களாகவும், நான்கு பேர் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.
ஆனால், இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில விவசாயிகள் ஒருவர் கூட இல்லை. மேலும், இந்தக் குழுவில் விவசாயச் சட்டங்களை எதிர்த்த பொருளாதார வல்லுநர்களும் யாரும் இல்லை. இது கடும் விமர்சனத்தையும் எழுப்பியது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்தே ஆறு பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த கோரிக்கைகளைத் தவிர நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துவது, உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகுவது, முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications