காம்பியாவில் 66 சிறார்கள் பலி! அந்த டானிக் இந்தியாவில் விற்பனையா? மத்திய அரசு பரபர விளக்கம்
டெல்லி: காம்பியாவில் இந்திய நிறுவனங்களின் இருமல் டானிக்குகள் எடுத்துக் கொண்ட சில குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்த மத்திய அரசு இப்போது முக்கிய விளக்கத்தை அளித்து உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் உலக சுகாதார அமைப்பு சார்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் இதுபோன்ற பணிகளால் தான் அங்குப் பல மரணங்கள் தடுக்கப்பட்டு உள்ளன.
இந்தச் சூழலில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் அடுத்தடுத்து குழந்தைகளை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தியது.
காம்பியாவில் 66 பிஞ்சு குழந்தைகளை கொத்து கொத்தாக பலி கொண்டதா இந்தியாவின் இருமல் டானிக்? WHO விசாரணை
உயிரிழப்பு
அதில் இருமல் டானிக்குகள் குடித்ததால்தான் குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது. ஹரியானாவின் சோனிபட் மெய்டென் நிறுவனத்தால் இந்த டானிக்குகள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்து. இதைக் குடித்ததால் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு காரணமாகக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 66 குழந்தைகள் இதுவரை இந்த டானிக்குகளை குடித்து உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து அந்த மருந்தின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
காரணம்
காம்பியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் கூட இந்த டானிக்குகள் காரணமாக உயிரிழப்புகள் நடந்து இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. இந்திய நிறுவனம் தயாரித்த இந்த டானிக்குகளில் சில குறிப்பிட்ட மிக அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. டை எத்திலீன், எத்திலீன் கிளைக்கால் அதிகமாக இருந்ததே குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழக்கக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விளக்கம்
ஒட்டுமொத்த உலகின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில், காம்பியாவில் ஏற்பட்டுள்ள இந்த 66 குழந்தைகளின் மரணம் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல இந்த மருந்து இந்தியாவிலும் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில் இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்து உள்ளது.
விற்பனை இல்லை
காம்பியாவில் மரணத்தை ஏற்படுத்தியதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள இருமல் டானிக்குகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், இவை ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் எங்கும் விற்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது. டானிக்குகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதில் கிடைக்கும் முடிவுகள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
டானிக்
மத்திய சுகாதார அமைச்சகம் உலக சுகாதார அமைச்சரகத்திடமும் கோரிக்கை ஒன்றை வைத்து உள்ளது. காம்பியாவில் குழந்தைகள் மரணத்திற்கு இந்த டானிக்குகளே காரணம் என்பதை உலக சுகாதார அமைப்பு கூறுவதற்கான டேட்டாவையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், பொதுவாக இறக்குமதி செய்யும் நாடுகளே அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கும் முன் சோதனை செய்வார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.