"தெளிவான பிளான்.!" காங். தேர்தல்.. சோனியா & ராகுல் காந்தி சாய்ஸ் இதுதான்! உண்மையை உடைத்த சசி தரூர்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளை சசி தரூர் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே தலைவர் பதவி காலியாகவே உள்ளது. 2019 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகினார்.
உடல்நிலையைக் காரணம் காட்டி சோனியா காந்தி காங்கிரசின் தலைவர் பொறுப்பை ஏற்க மறுக்கிறார். இருப்பினும், மூத்த நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் அவர் இடைக்கால தலைவராக உள்ளார்.
கார்கே - சசி தரூர் நேரடி போட்டி.. 'ஜி23’ ஆதரவு யாருக்கு? ரேஸில் முந்தும் கார்கே.. என்ன நடக்கும்?
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இந்தச் சூழலில் தான் புதிய தலைவரைத் தேர்வு செய்ய அக்.17இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் எனப் பலரும் கேட்டுக் கொண்டனர். இருப்பினும், அதைத் திட்டவட்டமாக மறுத்த ராகுல், தான் மட்டுமின்றி நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்பதில் மிக உறுதியாக இருந்தார்.
சசி தரூர்
இதையடுத்து அசோக் கெலாட் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த குழப்பங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் கூட மறுபுறம் சசி தரூர் சத்தமின்றி வேட்புமனு தாக்கல் செய்தார்.
நேரு குடும்பம்
இதன் மூலம் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், சசி தரூர் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், "நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் (சோனியா, ராகுல், பிரியங்கா) நேரில் சந்தித்துப் பேசினேன். கட்சித் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று யாரும் இல்லை என்றும் அப்படி யாரும் இருக்க மாட்டார் என்றும் அவர்கள் என்னிடம் பலமுறை கூறினர்.
தெளிவான பிளான்
நேர்மையான தேர்தலைத் தான் அவர்களும் விரும்புகிறார்கள். நேரு குடும்பம் நடுநிலையாக இருக்கிறது. அதேபோல கட்சியும் பாரபட்சமற்றதாக இருக்கும். ஆரோக்கியமான தேர்தல் நடத்தி கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். கட்சித் தலைவரே இப்படி உறுதி அளித்துவிட்டதால் எனக்கு அதன் பின்னர் எவ்வித தயக்கமும் இல்லை. இந்தத் தேர்தல் யுத்தம் எல்லாம் இல்லை ஒரே கட்சியில் உள்ள இருவருக்கும் இடையே நடக்கும் சிறிய போட்டிதான்.
வாபஸ்?
இருவரும் நிர்வாகிகள் மத்தியில் சென்று ஆதரவைத் திரட்ட முயல்கிறோம். சிலர் நான் வேட்புமனுவை வாபஸ் பெறுவேன் என்பது போலச் சொல்கிறார்கள். இப்போது வரை பலர் என் மீது நம்பிக்கை வைத்து வேட்புமனு செய்ய உதவியாக இருந்தார்கள். அவர்களை என்னால் கைவிட முடியாது. இது எனக்குக் கடுமையான சவாலாக இருக்கும் என எனக்குத் தெரியும். ஆனால், இதைத் தைரியமாக எதிர்கொள்வேன்.
போட்டி ஏன்
காங்கிரஸ் தொண்டர்கள் தான் என்னைப் போட்டியிடச் சொன்னார்கள். அவர்கள் கட்சியில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கட்சி விரும்பும் மாற்றமாகவும் இளைஞர்களின் குரலாகவும் நான் நிச்சயம் இருப்பேன். இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த மட்டுமே உதவும்" என்று அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இப்போது மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டது. வேட்புமனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ம் தேதி நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.