நீரில் மூழ்கிய டெல்லி ஐஏஎஸ் அகாடமி பேஸ்மெண்ட்- 3 பேர் பலி! நள்ளிரவில் என்ன நடந்தது? பகீர் தகவல்
டெல்லி: மேற்கு டெல்லி பகுதியில் இருக்கும் பிரபல பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் திடீரென தண்ணீர் புகுந்ததால் அங்கே மாணவர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகும் மாணவர்களை வெளியே அழைத்து வர முடியவில்லை. இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கே நள்ளிரவில் என்ன நடந்தது என்பது குறித்த சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே மேற்கு டெல்லியின் ராஜேந்திர நகரில் பயிற்சி மையம் நீரில் மூழ்கிய நிலையில், அதில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது : டெல்லியின் ராஜேந்திர நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் அடித்தளத்தில் மழை காரணமாக நீர் சூழ்ந்து இருக்கிறது. அங்கே பிரபல ஐஏஎஸ் அகாடமி ஒன்று செயல்பட்டு வந்த நிலையில், அது முழுக்க முழுக்க நீரில் மூழ்கி இருக்கிறது. மாணவர்கள் அங்கே சிக்கியுள்ளது குறித்து நேற்றிரவு சுமார் 7.20 மணியளவில் போலீசாருக்கு கால் வந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்புப் பணிகளுக்கு உதவ ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. உள்ளே சிக்கிய மாணவிகளை வெளியே எடுத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இருப்பினும், கனமழையால் நீர் அதிகமாக இருந்ததால் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதில் சிக்கல் தொடர்ந்தது. தொடர் முயற்சிக்குப் பிறகு சில மணி நேரம் கழித்து இரண்டு மாணவிகளின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. சற்று நேரம் கழித்து மூன்றாவதாக மாணவர் ஒருவரது சடலம் பின்னர் இரவு மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
போலீசார் தகவல்: இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் எம்.ஹர்ஷவர்தன் கூறுகையில், "உடல்களை மீட்டு இப்போது மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். நீரைத் தொடர்ந்து வெளியேற்றி வருகிறோம். இருப்பினும், இன்னும் பேஸ்மெண்டில் 7 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது... மாணவர்கள் இப்போதைக்கு இங்கே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். பேஸ்மெண்டில் வேறு யாராவது இருக்கிறார்களா எனச் சரியாகத் தெரியவில்லை. இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகத் தீயணைப்புத் துறை காவல்துறை தெரிவித்தனர்.
தப்பிய 30 பேர்: அங்கே செயல்பட்டு வந்த பிரபல ஐஏஎஸ் பயிற்சி அகாடமி வெள்ளத்தில் மூழ்கும் முன்பு அங்கிருந்த 30 மாணவ- மாணவிகள் தப்பித்துவிட்டனர். இருப்பினும், இந்த 3 பேர் மட்டும் அங்குச் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேற்கு தில்லியில் உள்ள படேல் நகரில் சமீபத்தில் தான் தண்ணீர் தேங்கிய தெருவைக் கடக்க முயன்ற யுபிஎஸ்சி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருந்தார். அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அமைச்சர்: இந்தச் சம்பவம் குறித்து டெல்லி பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி, "டெல்லியில் மாலையில் பெய்த கனமழையால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராஜேந்திர நகரில் உள்ள பயிற்சி மையத்தை நீர் சூழ்ந்துள்ளது. டெல்லி மேயர் மற்றும் உள்ளூர் எம்எல்ஏ சம்பவ இடத்தில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறேன்" என்றார்.
பாஜக சாடல்: அதேநேரம் இந்தச் சம்பவத்திற்கு ஆம் ஆத்மி அரசின் தோல்வியே காரணம் என்று பாஜக சாடியுள்ளது. இது தொடர்பாக புது டெல்லி பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ், "இந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் பாதையைச் சுத்தப்படுத்தப்பட்டு, அங்குத் தேங்கி இருக்கும் மணலை நீக்க வேண்டும் எனப் பல முறை வலியுறுத்தினோம். . அப்படிச் செய்திருந்தால், இந்த சோகம் நடந்திருக்காது.
மழை என்றால் 2-3 அடி தண்ணீர் தேங்கலாம். ஆனால், பேஸ்மெண்ட் முழுக்க மூழ்கி, டைவர்ஸ் உள்ளே செல்லும் நிலை ஏற்பட்டு பார்த்து இருக்கிறீர்களா.. இந்தச் சம்பவத்திற்கு ஆத்மி அரசு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பொறுப்பு: என்று சாடியுள்ளனர். மேலும், அங்கே சிலர் போராட்டத்தையும் நடத்தினர். இதனால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications