டிரம்புக்கு நோபல் பரிசா? இந்தியா கொடுத்த ரியாக்ஷன்.. தற்பெருமை பேசும் அதிபருக்கு சுளீர் பதிலடி
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரை நிறுத்தியதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எந்த பங்கும் இல்லை. ஆனாலும் டொனால்ட் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நான் தான் என்று தம்பட்டம் அடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவரே சொல்லி கொண்டார். தற்போது டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று ‛டிமாண்ட்' வைக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பான கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை பதிலளித்துள்ளது.
அமெரிக்கா.. உலகம் முழுவதும் இருநாடுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனையில் மூக்கை நுழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. வல்லரசு நாடு என்பதால் பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளை அடக்கி ஆள்வதை அமெரிக்கா வாடிக்கையாக வைத்துள்ளது.

தற்போது 2வது முறையாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவரும் ஒவ்வொரு நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்து மிரட்டி வருகிறார். இந்த வரி விதிப்பு மிரட்டலில் நம் நாடும் தப்பவில்லை. நம் நாட்டுக்கும் 25 சதவீத வரியை டிரம்ப் போட்டுள்ளார். வரும் 7 ம் தேதி முதல் அந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வர உள்ளது.
இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள், விமானப்படைதளங்கள், ராணுவ தளங்களை அழித்தது. இதில் நடுங்கிய பாகிஸ்தான் நம்மிடம் மண்டியிட்டது. போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து போர் நிறுத்தப்பட்டது.
ஆனால் டொனால்ட் டிரம்போ, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நான் தான். அமெரிக்கா தலையிடாவிட்டால் அணுஆயுத போர் வந்திருக்கும். இருநாடுகளும் போரை தொடர்ந்தால் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை மறந்துவிட வேண்டும் என்று கூறி போரை நிறுத்தினேன் என்று தம்பட்டம் அடித்து வருகிறார். பாகிஸ்தான் உடனான போரை நிறுத்தியதில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பலமுறை கூறிவிட்டார். ஆனால் டிரம்போ போரை நிறுத்தியது நான் தான் நான் தான் என்று கூறி வருகிறார்.
அதோடு அவர் சமீபத்தில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூட தெரிவித்தார். டிரம்ப் இப்படி கூறியதை தொடர்ந்து பாகிஸ்தானும் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறியது. அதேபோல் வெள்ளை மாளிகை சார்பிலும் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற ‛டிமாண்ட் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லவிட் கூறுகையில், ‛‛டொனால்ட் டிரம்ப் உலகம் முழுவதும் பல்வேறு மோதல்களை இடைநிறுத்தி அமைதியை கொண்டு வந்துள்ளார். தாய்லாந்து - கம்போடியா, இஸ்ரேல் - ஈரான், ருவாண்டா - காங்கோ, இந்தியா - பாகிஸ்தான், செர்பியா - கொசோவா, எகிப்து - எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் இடையே மோதலை நிறுத்தி உள்ளார். குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒன்று என்று இருநாடுகள் இடையே அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்'' என்று கூறினர்.
இந்நிலையில் தான் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கூறியிருப்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛வெள்ளை மாளிகை தொடர்பான கேள்விகளை அவர்களிடம் எடுத்து சென்று கேளுங்கள்'' என்று கூறினார். இதன்மூலம் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்பதை இந்தியா நிராகரித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்பை பொறுத்தவரை தற்பெருமை பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது ரஷ்யா - உக்ரைன் போரை அதிபரானதும் ஒரு மாதத்துக்குள் நிறுத்திவிடுவேன் என்று கூறினார். ஆனால் அவர் பதவியேற்று 6 மாதம் ஆன நிலையில் இன்னும் போரை நிறுத்தவில்லை. போரை நிறுத்த முடியாமல் அவர் திணறி வருகிறார்.
அதேபோல் நான் அதிபராக இருந்தால் ரஷ்யா - உக்ரைன் போரை வந்து இருக்காது எனக்கூறி முன்னாள் அதிபர் ஜோபைடனை திட்டினார். ஆனால் ஈரான் மீது போர் தொடுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக டொனால்ட் டிரம்ப் தனது விமானப்படையை வைத்து குண்டுவீசி பதற்றத்தை அதிகப்படுத்தினார். மேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்பதாக கூறிவிட்டு பயங்கரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தானுடன் சேர்ந்து கச்சா எண்ணெய் டீலை முடித்துள்ளார் டிரம்ப். இப்படி சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று டிரம்ப் செயல்பட்டு வரும் நிலையில் தான் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications