"வடக்கு vs தெற்கு.." பற்றி எரியும் விவாதம்! வசமாக வந்து சிக்கிய திமுக! கொந்தளித்த மோடி! என்ன நடந்தது
டெல்லி: 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே வடக்கு vs தெற்கு என்ற விவாதம் தீயாகப் பரவி வருகிறது. இது எப்படி ஆரம்பித்தது, தலைவர்கள் குறிப்பிட்டது என்ன என்பவை குறித்து நாம் பார்க்கலாம்.
சமீபத்தில் நடைபெற்ற மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. அதேபோல மறுபுறம் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது வடக்கு vs தெற்கு என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளது.

அதிலும் நேற்று நாடாளுமன்றத்தில் திமுக தருமபுரி எம்.பி. செந்தில் குமார், மாட்டுச் சிறுநீர் மாநிலங்கள் என்று கூறியது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
வடக்கு vs தெற்கு விவாதம்: பாஜகவின் சித்தாந்தம் வட இந்தியாவில் மட்டும் ஒர்க்அவுட் ஆவதாகவும் தென்னிந்தியா அதை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் பாஜகவை விமர்சிப்போர் கூறுகின்றனர். அதேநேரம் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இப்படி 'வடக்கு vs தெற்கு' என்ற விவாதத்தைக் கிளப்பி நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகவும் தேர்தல் தோல்வியை ஏற்க முடியாதவர்களே இப்படிக் கூறி வருவதாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கர்நாடகாவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகா. அங்கேயும் பாஜக ஆட்சியை இழந்தது. இப்போது தெலுங்கானாவில் காங்கிரஸின் வெற்றி தென் இந்தியாவில் அதை வலுப்படுத்தியுள்ளது. மற்ற தென் மாநிலங்களான தமிழ்நாட்டில் திமுகவும் கேரளாவில் இடதுசாரிகளும் ஆட்சியில் உள்ளன. அதேநேரம் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. அவர்கள் கூட்டணியில் இல்லை என்றாலும் முக்கியமான தேசிய பிரச்சினைகளில் பாஜகவை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜகவைப் பொறுத்தவரை, அவர்கள் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் வென்றுள்ளனர். இது தவிர மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் நிலையில், இந்தி ஹார்ட் லேண்ட் முழுக்க அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவே வடக்கு vs தெற்கு என்ற விவாதம் உருவாகக் காரணமாக இருக்கிறது.
எப்படி ஆரம்பித்தது: வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளில் காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி, "தெற்கு-வடக்கு என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது" என்று ட்வீட் செய்திருந்தார். அதேபோல மேலும் சிலரும் கிட்டத்தட்ட இது வடக்கு vs தெற்கு என்பது போலக் கருத்துகளைக் கூறினர். இதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். காங்கிரஸ் எப்போதும் பிரிவினை அரசியலையே செய்யும் என்றும் இப்போது இதைக் கையில் எடுத்துள்ளதாகவும் பாஜகவினர் சாடி வருகின்றனர்.
பிரவீன் சக்ரவர்த்தி தனது ட்வீட்டை டெலிட் செய்துவிட்ட போதிலும் இன்னும் அது குறித்த விவாதம் ஓயவில்லை என்றே சொல்லலாம். பலரும் காங்கிரஸ் கட்சி வடக்கு, தெற்கு எனப் பிரித்து அரசியல் செய்ய முயல்வதாகச் சாடி வருகின்றனர். பாஜக தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ், கேரளா பாஜக தலைவர் கே சுரேந்திரன் ஆகியோர் காங்கிரஸைச் சாடியுள்ளனர்.
பிரதமர் மோடி பரபர: இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ட்வீட் செய்திருந்தார். இது தொடர்பாக ஆங்கில டிவி சேனல் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த அவர் ஸ்மைலிகளை சேர்த்து ஒரு ட்வீட் செய்திருந்தார். மோடி எக்ஸ் கணக்கில் இருந்து இப்படி ஸ்மைலிகளுடன் ட்வீட் வந்தது இல்லை. இதனால் அந்த ட்வீட் உடனடியாக டிரெண்டானது.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அவர்கள் தங்கள் ஆணவம், பொய்கள், அவநம்பிக்கைகள் மற்றும் அறியாமை ஆகியவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஆனால்... அவர்களின் பிரிவினைத் திட்டத்தில் இருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 70 ஆண்டுக்கால பழைய பழக்கம் அவ்வளவு எளிதில் போய்விடாது.. மக்களின் தேர்வு இதுதான். இனி பல முடிவுகள் இப்படிதான் இருக்கும் தயாராகுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
கடைசியில் வந்த சிக்கிய திமுக: இத்துடன் இந்த பஞ்சாயத்து முடிந்துவிடும் என்று நினைத்தால் சரியாக அப்போது திமுக எம்பி செந்தில் குமார் இந்தி ஹார்ட் லேண்ட் மாநிலங்களை மாட்டுச் சிறுநீர் மாநிலங்கள் எனக் குறிப்பிட்டார். இது நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியது பலரும் அவரது பேச்சை வன்மையாகக் கண்டித்தனர். பொதுவெளியில் பேசும் போது நாகரிகமாகப் பேச வேண்டும் என்று தலைமை கழகத்தில் இருந்தும் அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும், இன்று இந்த காரணத்திற்காகவே நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. இப்படி தான் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்தது முதலே வடக்கு vs தெற்கு என்ற விவதாம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.












Click it and Unblock the Notifications