எக்ஸிட் போல் சர்வே வந்த உடன் பிரசாந்த் கிஷோர் பரபர.. இரண்டே வரியில் நறுக்! என்ன இப்படி சொல்லிட்டாரு
டெல்லி: லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று மாலை முதல் வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாகப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றன. முதலாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த நிலையில், கடைசிக் கட்ட தேர்தல் நேற்று நடந்தது.

எக்ஸிட் போல் முடிவுகள்: லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், நேற்று முதல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில் பெரும்பாலான சர்வேக்களில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்களில் கடந்த முறையைக் காட்டிலும் பாஜக கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இதற்கிடையே லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் இப்போது வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எக்ஸிட் போல் முடிவுகள் வரத் தொடங்கியதும் அவர் தனது ட்விட்டர் தளத்தில் இந்தியில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்: அதாவது பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அடுத்த முறை தேர்தல் மற்றும் அரசியல் பற்றிப் பேசும் போது போலி பத்திரிகையாளர்கள், வெறும் வாய் மட்டும் பேசும் அரசியல்வாதிகள் மற்றும் தங்களை தாங்களே வல்லுநர்கள் எனக் கூறிக் கொள்ளும் நெட்டிசன்களிடம் தேவையற்ற விவாதங்கள் மற்றும் ஆய்வுகளைச் செய்து உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணாக்காதீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நேற்று மாலை லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் சர்வே வெளியான நிலையில், பிரசாந்த் கிஷோர் நேற்றிரவு இந்தக் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 300+ சீட்களில் நிச்சயம் வெல்லும் என்றும் கடந்த 2019இல் பெற்ற சீட்களை காட்டிலும் கூடுதல் இடங்களில் வெல்லவும் வாய்ப்புள்ளதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.
என்ன சொல்லி இருந்தார்: இது தொடர்பாக அவர் பல ஊடகங்களில் பேட்டியும் அளித்திருந்தார். அப்போது சில பேட்டிகளில் அவர் டென்ஷனாகி இருந்தார். அவரது பேச்சு இணையத்தில் டிரெண்டாகி பரவலாக விமர்சனங்களையும் கிளப்பி இருந்தது. இந்தச் சூழலில் தான் லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லும் என பெரும்பாலான சர்வேக்கள் வரும் நிலையில், அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் பாஜக பெரிய வெற்றியைப் பெறும் என்றே கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "பாஜக கடந்த முறை பெற்ற இடங்கள் அல்லது அதை விடக் கூடுதல் இடங்களில் வெல்லும்.. மேற்கு மற்றும் வட இந்தியாவில் பெரிய மாற்றம் எதுவும் தென்படவில்லை. கிழக்கு மற்றும் தென்னிந்தியாவிலும் கூட பாஜகவுக்குக் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது.
தென் மாநிலங்கள்: குறிப்பாகத் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக தனது இருப்பை வலுப்படுத்த இருக்கிறது. இங்கு பாஜக கூடுதல் இடங்களில் நிச்சயம் வெல்லும்" என அவர் கூறியிருந்தார். நேற்று வெளியான பல எக்ஸிட் போல்களில் பாஜக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்முறையாக வெல்லும் எனக் கூறியிருந்தது. மேலும், கர்நாடகாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் எனக் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications