துல்லிய அட்டாக்! ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எஸ்-400 ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை இறக்குமதி செய்வதற்கான தடைகளில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Recommended Video
பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட உறவு இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்திய பாதுகாப்புத் துறையிடம் இருக்கும் பல ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டது தான்.
அப்படித்தான் நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய நவீன ஏவுகணைகளான ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணைகளைப் பெற ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தம் போட்டது.

ரஷ்யா
ரூ35,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் முதல் தொகுப்பு, ஏற்கனவே இந்தியாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வரும் நிலையில், எஸ்400 ஏவுகணை விவகாரத்தில் இந்தியா மீது அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், நேற்றைய தினம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, ஏவுகணைகளை இறக்குமதி செய்வதற்கான தடைகளிலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்கா
சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு இதுபோன்ற அதிநவீன ஆயுதங்கள் தேவை என்பது இதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது. அமெரிக்காவைச் சட்ட திருத்தத்தை மேற்கொண்ட இந்த எஸ்400 ஏவுகணைகளில் என்னென்ன சிறப்புகள் உள்ளன? பார்க்கலாம் வாங்க! தரையில் இருந்து வானத்திற்குச் சென்று தாக்கும் வகை ஏவுகணைகளில் ரஷ்யாவின் மிகவும் மேம்பட்ட நீண்ட தூர ரேஞ்ச் கொண்ட ஏவுகணை இந்த எஸ்-400 ஏவுகணை ஆகும்.

எஸ்-400 ஏவுகணைகள்
ரஷ்யாவின் இந்த எஸ்-400 ஏவுகணையை நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தரையில் இருந்து ஏவப்படும் SAM வகை ஏவுகணையாகும். மேலும், பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திறனையும் இந்த ஏவுகணை கொண்டு உள்ளது. இது ரஷ்யாவின் நான்காம் தலைமுறை SAM ரக ஏவுகணை ஆகும். அதேநேரம் அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளில் இருக்கும் இடைமறித்துத் தாக்கும் வசதி இந்த எஸ்-400 ஏவுகணைகளில் இல்லை.

ஆய்வு
எஸ்-400 வடிவமைப்பை ரஷ்யா கடந்த 1993இல் முதலில் தொடங்கியது. சோவியத் யூனியன் வீழ்ச்சி, புதிய ஏவுகணையை வடிவமைப்பதில் இருக்கும் சிக்கல் என பல்வேறு காரணங்களால் ரஷ்யாவின் முயற்சி தாமதம் ஆனது. நீண்ட தாமதம் காரணமாக எஸ்-400 ஏவுகணையின் 70-80% தொழில்நுட்பங்களில் முந்தைய எஸ்-300 ஏவுகனைகளில் இருந்தே எடுக்கப்பட்டன. 1999இல் இறுதிக்கட்ட சோதனை தொடங்கப்பட்டன. முதல் எஸ்-400 ஏவுகணை 2007இல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், விரைவில் அது ரஷ்யாவின் பாதுகாப்புப் படையிலும் சேர்க்கப்பட்டது

எவ்வளவு தூரம்
வானத்தில் சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட இந்த ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி அழிக்கும். மேலும், 60 கிமீ சுற்றளவில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இவை இடைமறித்துத் தாக்கும் திறன் கொண்டவை. எஸ்-400 ஏவுகணையில் பயன்படுத்தப்படும் 40N6 வகையின் வான் பாதுகாப்பு திறன்களை 400 கிமீ வரை நீட்டிக்க முடியும்.

உலக நாடுகள்
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் இந்த எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. துருக்கி பெலராஸ் போன்ற நாடுகளிடம் ஏற்கனவே இந்த எஸ்-400 வகை ஏவுகணைகள் உள்ளன. அதேபோல சீனாவும் கடந்த 2014இல் எஸ்-400 வகை ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் போட்டது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீனாவுக்கு முதல் எஸ்-400 ஏவுகணைகள் அனுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications