அதென்ன பாவ வரி.. "இந்த" பொருட்களுக்கு மட்டும் 40% ஜிஎஸ்டி வரி ஏன்? ஆஹா மக்களே நோட் பண்ணுங்க
டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்றைய தினம் பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியானது. அதேநேரம் சில பொருட்களின் விலை உயர்ந்தும் உள்ளன. குறிப்பாக ஆடம்பர மற்றும் sin goods எனப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் நேற்று பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக ஜிஎஸ்டியில் 40% வரி அடுக்கு புதிதாகச் சேர்க்கப்பட்டன. sin goodsகளுக்கு மட்டும் இந்தக் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதென்ன பாவப் பொருட்கள்.. அதன் மீதான வரியைச் சிலர் sin tax அதாவது பாவ வரி எனச் சொல்ல என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

40% ஜிஎஸ்டி
சில ஆடம்பரப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது மத்திய அரசு 40% ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள வரி அடுக்குகளில் இதுதான் மிகவும் உயர்ந்ததாகும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை அறிவித்தார். பெரும்பாலான பொருட்களுக்கான வரிகள் 5% மற்றும் 18%ஆகக் குறைக்கப்பட்ட அதேவேளையில், இந்தப் புதிய 40% அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.
அதென்ன பாவ வரி
sin goods (பாவ பொருட்கள்) என்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும். உடல்நலத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் பொருட்களை இதுபோல குறிப்பிடுவார்கள். புகையிலை, குட்கா, பான் மசாலா, மதுபானங்கள் மற்றும் சர்க்கரை பானங்களை நாம் சொல்லலாம். இத்தகைய பொருட்களை மக்கள் அதிகம் எடுத்துக் கொள்வதைக் குறைக்கவும், பொது நலனுக்கான வருவாயை அதிகரிக்கவும் உலக நாடுகள் இதுபோன்ற பொருட்கள் மீது அதிக வரிகளை விதிக்கின்றன.
எதற்காகக் கூடுதல் வரி
அதுபோல இந்தியாவிலும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எப்போதும் மிக உயர்ந்த ஜிஎஸ்டி விகிதங்களைக் கொண்டிருந்தன. முன்பு இந்த பொருட்களுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி வரி அடுக்கான 28% வரியுடன் கூடுதல் இழப்பீட்டு வரியை (Compensation Cess) விதிக்கப்பட்டிருந்தது.. தற்போது இழப்பீட்டு வரி நீக்கப்படுவதால், அதற்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இவை உடலுக்கு தீங்கானது என்பதால் பொதுமக்கள் இதைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் சில உயர்தர ஆடம்பரப் பொருட்கள் என ஒரு குறிப்பிட்ட பட்டியலில் உள்ள பொருட்களுக்கு மட்டுமே இந்த 40% வரி பொருந்தும். இழப்பீட்டு வரி நீக்கப்படுவதால், இந்தப் பொருட்களில் இருந்து பெறப்படும் வரி வருவாய் குறையும். இதன் காரணமாகவே ஜிஎஸ்டியை உயர்த்தி வரி வசூல் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். உடல்நலத்திற்கு அல்லது சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
40% ஜிஎஸ்டி அடுக்கின் கீழ் வரும் பொருட்கள்
பான் மசாலா, சிகரெட்டுகள், குட்கா, புகையிலை, பதப்படுத்தப்படாத புகையிலை, சுருட்டு, புகையிலை மாற்றுகள், கூல் டிரிங்க்ஸ், சர்க்கரை பானங்கள், காஃபின் பானங்கள், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் தளங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், 1,200 சிசி-க்கு மேல் பெட்ரோல் கார்கள் அல்லது 1,500 சிசி-க்கு மேல் டீசல் கார்கள், 350 சிசி-க்கு மேல் மோட்டார் சைக்கிள்கள், படகுகள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விமானங்கள், சொகுசு கார்களும் இந்தப் பட்டியலில் உள்ளன. இவை sin goods இல்லை என்றாலும் பணக்காரர்கள் வாங்கும் பொருட்கள் என்பதால் இதற்கான வரி உயர்த்தப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலான பொருட்கள் ஏற்கனவே 28% ஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டு வரியின் கீழ் இருந்தன. அவை தான் இப்போது 40% பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications