12 வயசு சிறுவன் மாரடைப்பால் பலி! குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்! "6 நிமிடங்கள்!" ரொம்பவே முக்கியம்
டெல்லி: 12 வயதே ஆன சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தைகளுக்கு என்ன மாதிரியான இதய பாதிப்பு வரும்? அதை எப்படிக் கண்டறிய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் மணீஷ் ஜாதவ். வழக்கம் போல நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற இவன், மதிய உணவை அங்கேயே சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு பள்ளி பேருந்தில் தனது சகோதரருடன் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
பஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை உடன் இருந்த மாணவர்கள் பார்த்துக் கத்த தொடங்கினர். நிலைமை கவனித்த ஓட்டுநர் உடனடியாக மருத்துவனிற்கு அழைத்துச் சென்றார்.

12 வயது சிறுவன் பலி
இருப்பினும், மணீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து "மணீஷ் நேற்று முன்தினம் மதியம் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். நாங்கள் அவருக்கு சிபிஆர் கொடுத்துக் காப்பாற்ற முயன்றோம். ஆனால், அவரது உயிரை எங்களால் காப்பற்ற முடியவில்லை. அறிகுறிகளை வைத்துப் பார்க்கும் போது, அவர் இதய செயலிழப்பால் (cardiac failure) உயிரிழந்ததாகவே தெரிகிறது. எனக்குத் தெரிந்து இதய செயலிழப்பால் உயிரிழந்த சிறுவன் மணீஷ் தான். கொரோனா பரவலுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

திடீர் மாரடைப்பு
இளைஞர்கள் மற்றும் சிறார்கள் மத்தியில் இந்த திடீர் மாரடைப்பு அல்லது எஸ்சிஏ (Sudden Cardiac Arrest) சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.. ஒரே இடத்தில் அமர்ந்து இருக்க வேண்டியது, நீரிழிவு, மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை காரணமாகவே இந்த திடீர் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது. இதுபோன்ற பழக்கங்களைக் கொண்டிராத சிலருக்கும் கூட இந்த மோசமான பாதிப்பு ஏற்படுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஆய்வில் இந்த திடீர் மாரடைப்பு அதிகபட்சம் 20 முதல் 40 வயதானவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படுகிறது

இந்தியர்கள்
இந்த இதய நோய்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய மக்கள் தொகைக்கு முன்கூட்டியே ஏற்படுவதாக இந்தியன் ஹார்ட் அசோசியேஷனின் தெரிவித்துள்ளது. அதாவது சிறு வயதிலேயே இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. மேலும், இதில் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை என்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டனர். இந்த திடீர் மாரடைப்பு பெரும்பாலும் முறையற்ற இதயத் துடிப்புகளால் தான் ஏற்படுகிறது.. இது இதயம் உடலுக்கு ரத்தத்தைச் செலுத்துவதைக் கூட சில நிமிடங்களில் நிறுத்திவிடுகிறது.

ஆறு நிமிடங்கள்
முதல் ஆறு நிமிடங்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்குச் சரியான சிகிச்சை கிடைக்காவிட்டால் SCA எனப்படும் இந்த திடீர் மாரடைப்பால் உயிரே போகும் அபாயமும் உள்ளது. மனித இதயம் நிமிடத்திற்கு 60-100 துடிக்கும். இந்த விகிதத்தில் ஏதேனும் ஏற்ற இறக்கங்கள், அதாவது இதயத் துடிப்பு மிக மெதுவாக அல்லது மிக வேகமாக இருந்தால், அது கார்டியாக் அரித்மியா என்று அழைக்கப்படுகிறது. இதயத் துடிப்பு திடீரென அதிகரிக்கும் நபர்கள் அல்லது மரபணு பாதிப்புகள் உள்ளவர்களுக்கு எளிதாக இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

என்ன வித்தியாசம்
இந்த SCAவும் மாரடைப்பும் ஒரே போன்ற பாதிப்புகள் இல்லை. மாரடைப்பும் ஏற்படும்போது, இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப்படும். இங்கு சில சமயங்களில் மின் டிஸ்டர்பன்ஸ் ( electrical disturbance) தூண்டப்பட்ட இதயம் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இதயம் துடிப்பது நின்றுவிட்டால், ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தின் உடல் உறுப்புகளுக்குச் செல்லாது. இதனால் சில நிமிடங்களில் மரணம் ஏற்படும். அல்லது நிரந்தர மூளை பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளது.

அறிகுறிகள்
மயக்கம்,
குறைந்த அளவிலான நாடித் துடிப்பு,
மூச்சுத் திணறல் அல்லது மயக்கம்,
நெஞ்சு பகுதியில் வலி,
பலவீனம் மற்றும் சோர்வாக உணர்வது,
படபடப்பு,
தலைச்சுற்றல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.

காரணம்
ஏற்கனவே இதய பாதிப்பு இருந்து அதற்கு உரியச் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்குத் தான் இந்த SCA எனப்படும் திடீர் மாரடைப்பு ஏற்படுவதாகச் சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அவற்றில் சில:
கரோனரி தமனி நோய் (Coronary artery disease): இதில், தமனிகள் கொலஸ்ட்ரால் அடைக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைகிறது.
மாரடைப்பு: இது வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் மற்றும் திடீர் இதய செயலிழப்பை ஏற்படுத்தும். மேலும், மாரடைப்பு உங்கள் இதயத்தில் உள்ள திசுக்களை பாதிக்கும்.
கார்டியோமயோபதி (cardiomyopathy): உங்கள் இதயத்தின் தசைச் சுவர்கள் நீண்டு விரிவடையும் போது அல்லது தடிமனாக இருந்தால், அது இதயம் விரிவடைவதற்கு வழிவகுக்கிறது.
பிறவி இதய நோய்: இது பிறக்கும் போதே சில பிரச்சினைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு பாதிப்பு. இதனால் திடீரென இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மட்டுமே. இதை யாரும் மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications