Baba Ka Dhaba: பால்ய விவாகம் முதல் பாபா கா தாபா வரை.. கடந்து வந்த பாதை.. விவரிக்கிறார் கண்டா பிரசாத்
டெல்லி: டெல்லியில் சமீபத்தில் கூட்டம் களைகட்டி வரும் பாபா கா தாபா கடையை தொடங்கியது எப்படி என்பது குறித்தும் தனது வாழ்க்கை வரலாறு குறித்தும் சமூகவலைதளத்தில் அதன் உரிமையாளர் விளக்கியுள்ளார்.
டெல்லியில் பாபா கா தாபா உணவகம் நடத்தி வரும் வயதான தம்பதி கண்டா பிரசாத் மற்றும் பதாமி தேவி ஆவார்கள். இவர்களின் உணவகத்திற்கு யாருமே வருவதில்லை என சமூகவலைதளங்களில் கலக்கமான வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து இவர்களது உணவகத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஜொமாட்டோ உணவு டெலிவரி செய்யும் நிறுவனமும் தங்கள் உணவக லிஸ்டில் இந்த வயதான தம்பதியின் உணவகத்தின் பெயரையும் சேர்த்துவிட்டது.
வாழ்க்கை வரலாறு
இந்த நிலையில் இதனால் மகிழ்ச்சி அடைந்த இவர்கள் தங்களது வாழ்க்கை வரலாற்றை சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். அதில் அவர்கள் கூறுகையில் எனக்கு 5 வயது இருக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. எனது மனைவிக்கு அப்போது 3 வயதுதான். எங்களுக்கு பால்ய விவாகம் நடைபெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருமணமாகாத பெண்கள் இருந்தால் அவர்களை வன்கொடுமை செய்துவிடுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு.
தேர்வுகள்
திருமணத்தை பொருத்தவரையில் எங்கள் இருவருக்குமே வேறு தேர்வுகளே கிடையாது. நான் அவளை விரும்பியே ஆக வேண்டும். அவளும் என்னை அப்படியே செய்ய வேண்டும். 1961-ஆம் ஆண்டு எனது மனைவியை முறைப்படி என்னிடம் ஒப்படைத்தார்கள். இருவரும் இணைந்து இல்லற வாழ்க்கையை தொடங்கினோம்.
டெல்லி
டெல்லியில் தொழில் வாய்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்ததால் இருவரும் உத்தரப்பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வந்தோம். முதலில் பழ வியாபாரம் செய்து வந்தோம், எங்கள் பிள்ளைகள் வளர்ந்ததால் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஹோட்டல் தொழிலை தொடங்கினோம். 30 ஆண்டுகளாக இந்த ஹோட்டலை நடத்திவருகிறோம்.
கடவுள்
வியாபாரம் கொஞ்சம் சுமார்தான். அந்த வீடியோவுக்கு பிறகு உணவகத்தில் கூட்டம் கூடி வருகிறது. என்னை பொருத்தவரையில் எனது வாழ்நாள் கனவு நேற்றுதான் பலித்தது என சொல்லலாம். கடவுள் எல்லாருடைய தேவைகளையும் கவனிப்பார். ஒரு சிலருக்கு அந்த தேவையை 30, 40, 50 வயதுகளில் பூர்த்தி செய்து கொடுப்பார்கள்.
மனைவி
எனக்கு 80 வயதில் அதை செய்து கொடுத்துள்ளார். உண்மையாக இருந்தால் ஒவ்வொருவரது ஆசையும் அவர்களது வாழ்நாளில் நிறைவேறும் என நம்புகிறேன். எனது மனைவியின் துணையோடு நான் இன்னும் பல நாட்கள் வாழ விரும்புகிறேன். இப்போது போட்டோவுக்கு போஸ் கொடுப்பது எப்படி என்பதை என் மனைவி பழகிக் கொண்டார்.
வைரல்
அதற்கு எனக்கு சில நாட்களாகலாம். எங்களது இளமை பருவத்தில் அவளை அழைத்துக் கொண்டு டீக்கடைக்கு செல்வதை போல் இப்போதும் அவளை அழைத்துக் கொண்டு செல்லவுள்ளேன் என்றார் கண்டா பிரசாத். தற்போது இவர்கள் கூறிய வாழ்க்கை வரலாற்று கதை வைரலாகி வருகிறது.