இனி பயாலஜி படிக்காத மாணவர்களும் கூட டாக்டர் ஆகலாம்.. வந்த முக்கியமான அறிவிப்பு.. புது ரூல்ஸ் என்ன
டெல்லி: 12ஆம் வகுப்பில் பயாலஜி பாடத்தை எடுத்திருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், அதைத் தளர்த்தி இப்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுவாக நம்மில் பலருக்கும் 11ஆம் வகுப்பில் எந்த க்ரூப்பை எடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கும். பலரும் ஆசிரியர் அல்லது சுற்றி இருப்போர் சொல்லும் க்ரூப்பை எடுப்பார்கள்.

அப்படி பயாலஜி இல்லாத பிரிவை எடுத்தோர் இதுநாள் வரை அதன் பிறகு மருத்துவர் ஆகவே முடியாது என்ற சூழலே இதுநாள் வரை இருந்து வந்தது. இதற்கிடையே இப்போது அதில் மாற்றம் வந்துள்ளது.
மருத்துவம்: கடந்த சில ஆண்டுகளாகவே நமது நாட்டில் மருத்துவ படிப்புகளான இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தனை காலம் 10+2 கல்வி முறையில், பயாலஜி எனப்படும் உயிரியல் பாடத்தை எடுத்தவர்களே மருத்துவம் படிக்க முடியும் என்ற விதி இருந்தது.
இதற்கிடையே இந்த விதியில் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முக்கிய பாடங்களாகக் கொண்டு 10+2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே நீட் தகுதித் தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பைத் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
பழைய விதி: இதற்கு முன்பு, இருந்த விதிகளில் பயாலஜி கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும் என்று விதி இருந்த நிலையில், அப்போது பள்ளியில் பயாலஜி படிக்காதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கும். அவர்களும் கூட இப்போது மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு இருந்த விதிமுறைகளின்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், பயாலஜி அல்லது பயோ டெக்னாலஜி ஆகிய பாடங்களை ஆங்கிலத்துடன் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து படித்திருக்க வேண்டும் என்று விதி இருந்தது. அதுவும் இதை வழக்கமான பள்ளிகளில் இருந்து முடிக்க வேண்டும், திறந்தவெளி பள்ளிகளில் இருந்து அல்லது தனியார் தேர்வாளர்களாகப் படித்திருக்கக் கூடாது என்ற விதி இருந்தது.
புது விதி: மேலும், பயாலஜி மற்றும் பயோடெக்னாலஜி பாடங்களைக் கூடுதல் பாடமாக எடுத்துப் படித்திருந்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்ற விதியும் இருந்தது. இந்த விதிகளை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த விதிகளை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையே தேசிய மருத்துவ ஆணையம் இப்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளிநாட்டில் மருத்துவம் படிக்கத் தகுதிச் சான்றிதழ்களை அளிப்பது மற்றும் நீட் அளவுகோல்களைத் தளர்த்துவது குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications