டின்னருக்கு போன இடத்தில் திடீர் மீட்டிங்.. அன்று மோடி- ஜின்பிங் இடையே என்ன நடந்தது! திடீர் விளக்கம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே ஜி20 உச்சி மாநாட்டின் சமயத்தில் நடைபெற்ற திட்டமிடப்படாத சந்திப்பு குறித்து இப்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளைத் தான் நாம் ஜி20 நாடுகள் என்று அழைக்கிறோம். உலகின் பெரும்பாலான மக்கள், பொருளாதாரம், ஏற்றுமதி இந்த 20 நாடுகளில் இருந்து தான் வருகிறது. இதனால் இந்த நாடுகள் எடுக்கும் முடிவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிற்குச் சுழற்சி முறையில் வழங்கப்படும். இந்தாண்டு இந்தியா தலைமை பொறுப்பிற்கு வந்துள்ள நிலையில், கடந்தாண்டு இந்தோனேசியா தலைமை பொறுப்பை ஏற்று இருந்தது.

ஜி20 மாநாடு: அப்போது உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி பகுதியில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜி 20 நாடுகளில் இருந்து பிரமதர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட டாப் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திட்டமிடப்படாத சந்திப்பு ஒன்று நடைபெற்றது. பிரதமர் மோடி அங்கு டின்னருக்கு சென்ற நிலையில், அப்போது எதிர்பாராத விதமாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
இது திட்டமிடப்படாத ஒரு சந்திப்பாக அமைந்துவிட்டது. அப்போது இரு நாடுகளின் தலைவர்களும் பேசிக் கொண்டனர். அப்போது இந்தச் சந்திப்பு குறித்து இரு நாடுகளும் விளக்கம் தரவில்லை. அது ஒரு திட்டமிடாத சந்திப்பு என்பதுடன் முடித்துக் கொண்டது. இதற்கிடையே இப்போது திடீரென பல மாதங்கள் கழித்து அந்தச் சந்திப்பு குறித்தும் அதில் பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் என்ன பேசினர் என்பது குறித்தும் தகவல்களைச் சீனா பகிர்ந்திருந்தது.
திடீர் சந்திப்பு: அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு, சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை ஜோகன்னஸ்பர்க்கில் சந்தித்துப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்தே இந்த விளக்கம் வந்தது. அதாவது ஜி 20 உச்சி மாநாட்டின் போது இரு நாட்டு தலைவர்களும் பேசிய போது, இரு தரப்பிற்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகச் சீனா கூறியிருந்தது.
இதற்கிடையே இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாக்சி கூறுகையில், "கடந்த ஆண்டு பாலி ஜி 20 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடியும் அதிபர் ஜி ஜின்பிங்கும் டின்னர் சமயத்தில் சந்தித்து பரஸ்பர மரியாதையைப் பரிமாறிக்கொண்டனர்.. இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர்.
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு: இந்தியா-சீனா எல்லையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைதியை மீட்டெடுத்து பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். பாலியில் இரு தரப்பிற்கும் இடையே நடந்தது சுருக்கமான உரையாடல் தான்.. அவர்கள் பரஸ்பரம் மரியாதையைப் பகிர்ந்து கொண்டனர்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மே 2020 முதலே இந்தியா-சீனா எல்லையில் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வந்தது. இரு தரப்பு ராணுவமும் அங்கு வீரர்கள் குவித்து வந்ததால் அங்கு மிக மோசமான பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. அதன் பிறகு ராணுவ அளவில் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதன் பின்னரே நிலைமை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications