அட ட்விஸ்ட்டு.. “கார்கேயின் வெற்றி காங்கிரஸின் வெற்றி”.. வீட்டுக்கே போய் வாழ்த்துச் சொன்ன சசி தரூர்!
டெல்லி : காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேயின் வெற்றி, காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து, உடனடியாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன சசி தரூர், பின்னர், கார்கேவின் வீட்டுக்கே சென்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசி தரூர், தேர்தலில் அதிருப்தியில் போட்டியிடவில்லை. மாற்றத்திற்காகவே போட்டியிட்டேன். கார்கேயின் வெற்றி காங்கிரஸின் வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் குடும்ப கட்சியா? காந்தி குடும்பம் அல்லாத தலைவர்கள் இவ்ளோ பேரு இருக்காங்களே - இதோ லிஸ்ட்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற நிலையில், இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதியில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார். மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சசிதரூர் 1,072 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
தேர்தலில் முறைகேடு புகார்
காங்கிரஸ் கட்சியின், 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு, ஆறாவது முறையாக நடந்த தேர்தலில் 22 ஆண்டுக்குப் பின், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக சசிதரூர் அணியின் தலைமை தேர்தல் ஏஜென்ட் சல்மான் சோஸ், தேர்தல் நடத்தும் அலுவலரான மதுசூதன் மிஸ்திரிக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
கார்கே வெற்றி - காங்கிரஸின் வெற்றி
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கார்கேவை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கார்கேயின் வெற்றியை காங்கிரஸ் கட்சியின் வெற்றியாகவே நாம் கருத வேண்டும். இந்தத் தேர்தல் ஒரு நபரைப் பற்றியது அல்ல. எப்போதும் கட்சியைப் பற்றியது. நாடு வலிமையாக இருக்க வலிமையான காங்கிரஸ் தலைவர் தேவை.
மாற்றத்திற்காகவே போட்டியிட்டேன்
காங்கிரஸை வலுப்படுத்துவது நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்பதால் கட்சியை பலப்படுத்தவே நான் எப்போதும் விரும்புகிறேன். தேர்தலில் அதிருப்தியில் போட்டியிடவில்லை. மாற்றத்திற்காகவே போட்டியிட்டேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாஜக சவாலை சந்திக்க தயாராக உள்ளோம். பாஜகவை எதிர்க்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கார்கே வீட்டுக்குச் சென்று வாழ்த்து
நான் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டிற்குச் சென்று அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், கட்சிக்கு எப்போதும் வழிகாட்டுவார். 1000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் எனக்கு வாக்களித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் கட்சி 22 ஆண்டுகளாக தேர்தலை நடத்தவில்லை. இந்த மாதிரியான தேர்தலில் சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும்." எனத் தெரிவித்துள்ளார்.
சோனியாவுக்கு பாராட்டு
மேலும், சோனியா காந்தியையும் பாராட்டியுள்ளார் சசி தரூர். தனது அறிக்கையில், "கட்சியின் வரலாற்றிலும், நமது எதிர்காலத்திலும் இந்த முக்கியமான நேரத்தில், கட்சியின் கால் நூற்றாண்டுத் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்ட, சோனியா காந்திக்கு நாங்கள் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு கடன்பட்டுள்ளோம். மிக முக்கியமான தருணங்களில் எங்களின் ஆணிவேராக இருந்து, எதிர்காலத்திற்கான புதிய பாதைகளை எங்களுக்கு வழங்கிய அவரது முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி கட்சிக்கான தொலைநோக்குப் பார்வைக்கு பொருத்தமான சான்று" எனத் தெரிவித்துள்ளார் சசி தரூர்.