சசி தரூருக்கு கிரீன் சிக்னல்? அப்செட் ஆன அசோக் கெலாட்.. நேரடியாக போன் போட்ட சோனியா! நடப்பது என்ன
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அசோக் கெலாட்டிடம் சோனியா காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் இப்போது இக்கட்டான ஒரு சூழலில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பெரியளவில் எந்தவொரு தேர்தலிலும் அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. அதேபோல பல மூத்த தலைவர்களும் அங்கிருந்து விலகி வருகின்றனர்.
இதன் காரணமாகக் காங்கிரஸ் தலைமை மீது அழுத்தம் அதிகரித்து உள்ளது. காங்கிரசுக்கு இப்போது நிரந்தர தலைவர் இல்லை. சோனியா காந்தி தான் கடந்த சில ஆண்டுகளாக இடைக்கால தலைவராக உள்ளார்.

காங்கிரஸ்
புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த நிலையில், வரும் அக். 17இல் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. இப்போதும் கூட காங்கிரஸில் பெரும்பாலானோர் ராகுல் காந்தி தான் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சசி தரூர்
இப்போது வரை ராகுல் காந்தி தலைவர் பதவி ஏற்கத் தயாராக இல்லை. இதன் காரணமாகச் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான அசோக் கெலாட்டை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு இடையே கேரள எம்பியான சசி தரூர் தலைவர் பதவியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. அவர் சமீபத்தில் தான் டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து இருந்தார். தேர்தலில் போட்டியிட அனுமதி பெறவே சசி தரூர் சோனியா காந்தியைச் சந்தித்தாக தகவல் வெளியானது.

கெலாட் அதிருப்தி
சில மாதங்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டத்தில் தான் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முடிவு எடுக்கப்பட்டது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிட்டால் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் தேர்தலில் போட்டியிடும் சசி தரூரையும் சோனியா காந்தி சந்தித்ததால், இது அசோக் கெலாட் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சோனியா காந்தி
இதனிடையே அசோக் கெலாட்டை சோனியா காந்தி நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யாருக்கும் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளிக்க மாட்டேன் எனச் சோனியா காந்தி கூறியதாகத் தெரிகிறது. மேலும், தலைவர் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

நம்பிக்கை
மேலும், வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தான் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கொள்கை வரும் என்றும் சோனியா காந்தி கெலாட்டிடம் நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசி உள்ளார். சமீபத்தில் சோனியா காந்தியைச் சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தான் கட்சித் தலைவராகத் தேர்வானாலும் கூட இன்னும் சில காலம் ராஜஸ்தான் முதல்வராக நீடிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

பதவி முக்கியமில்லை
தனக்கு வழங்கப்பட்ட எந்தப் பொறுப்பையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும், பதவி தனக்கு முக்கியமில்லை என்றும் கெலாட் கூறியதாகத் தெரிகிறது. அதேபோல தனக்கு எந்த பதவி வழங்கப்பட்டாலும் ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் எப்போதும் காங்கிரஸ் உடன் தான் இருப்பார்கள் என்றும் அவர் சோனியா காந்தியிடம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
காங்கிரஸில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாகத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில் சசி தரூர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அசோக் கெலாட்டிடம் சோனியா காந்தி நேரடியாகப் பேசி உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications