"4 மாசமா சிறை.." டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டுமா.. சுப்ரீம் கோர்ட் பரபர
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத் துறை கைதுக்கு எதிரான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேநேரம் சிபிஐயும் அவரை கைது செய்துள்ளதால் கெஜ்ரிவாலால் சிறையில் இருந்து இப்போதைக்கு வெளியே வர முடியாது. இதற்கிடையே கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கெஜ்ரிவாலைக் கைது செய்திருந்த நிலையில், இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அதேநேரம் இந்த மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக சிபிஐ அமைப்பும் கெஜ்ரிவாலைக் கைது செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கெஜ்ரிவால்: அதேபோல கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் அவர் உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதற்கிடையே இது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதாவது கெஜ்ரிவாலைத் தனது முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முதல்வர் பதவி: இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கூறுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பதவி விலகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா... அல்லது முதலமைச்சராகவோ அமைச்சராகவோ செயல்பட முடியாது எனக் கூற முடியுமா என்பதில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மக்களால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் டெல்லியின் முதலமைச்சர்... முக்கியத்துவமும் செல்வாக்கும் கொண்ட பதவி. எனவே இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த வழிகாட்டுதலையும் வழங்கப் போவதில்லை. இது தொடர்பான முடிவை அரவிந்த் கெஜ்ரிவால் தான் எடுக்க வேண்டும்" என்று மட்டும் கூறியுள்ளது.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்தே அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். குறிப்பாகப் பண மோசடி விவகாரத்தில் கைதாகியுள்ள கெஜ்ரிவால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி பாஜக வலியுறுத்தியது. இருப்பினும், கெஜ்ரிவால் நிச்சயம் ராஜினாமா செய்ய மாட்டார் என்றே ஆம் ஆத்மி தொடர்ந்து கூறி வருகிறது. கெஜ்ரிவால் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் ஆம் ஆத்மி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
3ஆவது முறை: முன்னதாக கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து விலக உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான ஒரு வழக்கைக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டத்தில் இதற்கு இடமில்லை என்று கூறிய அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதேபோல டெல்லி ஐகோர்ட்டும் இதுவரை 3 முறை இதுபோன்ற மனுவைத் தள்ளுபடி செய்துள்ளன.
என்ன காரணம்: கடந்த 2019இல் கெஜ்ரிவால் மதுபான கொள்கை இல்லாமல் வேறு ஒரு வழக்கு தொடர்பாகவும் விசாரணையை எதிர்கொண்டிருந்தார். அப்போதும் அவரை செய்யக் கட்டாயப்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, "வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் ஒருவேளை கெஜ்ரிவால் வழக்கில் இருந்து விடுக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த மே மாதம் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், தான் ஏன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறித்து விளக்கமளித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனக்கு முதல்வர் பதவி முக்கியமில்லை. அதேநேரம் என் மீது பொய் வழக்குப் போட்டு ராஜினாமா செய்யச் சொல்லி சதி செய்கிறார்கள். இதன் காரணமாகவே நான் முதல்வர் பதவியில் இருந்து விலகவில்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications