முன்கூட்டியே வரும் மோடியின் தீபாவளி பரிசு.. ஜிஎஸ்டி எப்போது குறைக்கப்படும்? வெளியான முக்கிய தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அடுக்குகளைக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே ஜிஎஸ்டி வரி குறைப்பு எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்பாகச் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி அடுக்குகளில் செய்யும் மாற்றம் குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதாவது தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி அடுக்குகள் எளிமையாக்கப்படும் என்றும் இதன் மூலம் மக்களின் வரிச்சுமை குறையும் என்றும் அவர் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்குவது குறித்து ஆலோசனைகள் நடந்தன.

ரூ. 40 ஆயிரம் கோடி
விரைவில் இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு செயல்பாட்டிற்கு வரும். இது மக்களுக்கு நல்ல விஷயம் தான் என்றாலும் கூட இந்த நடவடிக்கையால் மத்திய அரசுக்குச் சுமார் ₹40,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜி.எஸ்.டி. செயலக அதிகாரிகள் அடங்கிய ஃபிட்மென்ட் கமிட்டி, இந்த வருவாய் பற்றாக்குறை குறித்த வரைவு விவரங்களைத் தெரிவித்துள்ளது. இந்த இழப்பை மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இப்போது 4 வரி அடுக்குகள் உள்ள சூழலில், ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பின் கீழ் இது 5% மற்றும் 18% என இரண்டு அடுக்கு வரி அடுக்குகளாக மாற்றப்படும். மேலும், புகையிலை, மது உள்ளிட்ட பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும். இந்த நடவடிக்கை வரி அமைப்பை எளிதாக்கினாலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் இழப்பு
சமீபத்தில் தான் மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்திருந்தது. இதனால் மத்திய அரசுக்கு ₹20,000 கோடி ஜி.எஸ்.டி. மற்றும் டி.டி.எஸ். வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தாண்டு தொடக்கத்தில் தான் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுக்கு ₹12 லட்சம் வரை வருமானம் வரி இல்லை என மத்திய அரசு அறிவித்தது.
இதுபோல மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த வருவாய் இழப்பு தற்காலிகமானதாக இருக்கும் என்றும் வலுவான நுகர்வோர் செலவினங்களால் இது ஈடுசெய்யப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஜிஎஸ்டி கூட்டம்
இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க 56வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3-4 தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. முன்னதாக செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இக்கூட்டம், மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகு முன்னதாகவே நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.
எப்போது அமலுக்கு வரும்
எல்லாம் சரியாகப் போனால் விஜயதசமி, அதாவது அக்டோபர் 2ம் தேதி அன்று புதிய ஜி.எஸ்.டி. விகிதங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரச்சினை எதுவும் வரவில்லை என்றால் அக்டோபருக்கு முன்னதாகவே கூட புதிய வரி முறை அமலுக்கு வரலாம் என்றும் சில அதிகாரிகள் கூறுகிறார்கள்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 20-21ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு (GoM) கூட்டத்தில், 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மாநில நிதி அமைச்சர்கள், 5% மற்றும் 18% என இரண்டு அடுக்கு ஜி.எஸ்.டி. அமைப்புக்கு மாற ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications