"ஜெயிக்கிறமோ இல்லையோ.. சண்ட செய்யனும்.." காங்கிரஸ் தலைமை உணருமா?
டெல்லி: அரசியல் என்பது அதிகாரத்துக்கான ஆட்டம்.. யோகிகளுக்கும், ஞானிகளுக்கும் அங்கு வேலை இருப்பதில்லை.
காங்கிரஸ் தலைமை பெரிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்.. ஒருபக்கம் அந்த கட்சியின் செயற்குழு கூடியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அரசியலில் எந்த மாதிரி தனது ஆத்ம சக்தியை வெளிப்படுத்துகிறது என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய காலகட்டத்தில்.. இந்த தத்துவம் ரொம்பவே அவசியப்படுகிறது.
மனிதர்கள் இரு பிரிவின் கீழ் வருவார்கள் என்று சொல்வார் பிரிட்டிஷ் தத்துவமேதை, பெர்ட்ரண்ட் ரசல். தங்களின் சொந்த தகுதியால் தலைவர்கள் அதிகாரத்துக்கு வருவதுண்டு. இன்னொரு வகையினர், அந்தத் தலைவர்களை பின்பற்றும் தொண்டர்களாக இருந்து அவர்கள் வழிகாட்டுதலின்படி அதிகாரத்தை அடைவதும் உண்டு.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம்...இந்த முடிவுகள் எடுக்கலாம்... தீருமா சிக்கல்!!
துறவு
இதில் மூன்றாவது ஒரு வகையும் உண்டு. அவர்கள் துறவு மனப்பான்மையில் இருப்பவர்கள். எந்த நெருக்கடியும் இன்றி முழு சுதந்திரத்தோடு செயல்படுவதற்காக, விலகி செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். அதிகாரத்தை மையப்படுத்தி இயங்கும் அரசியலுக்கு இவர்கள் பொருத்தம் அற்றவர்கள். ஆனால் சன்னியாசிகள், ஞானிகள் போன்றவர்கள் இந்த பிரிவின் கீழ் வருவார்கள். ஆசையை துறந்தவர்கள் இந்தவகை பிரிவில் வரக்கூடியவர்கள். அரசியல் என்று வந்துவிட்ட பிறகு அதிகாரத்தை நோக்கிய தாகம் இருக்க வேண்டும். அல்லது சன்னியாசம் பூண வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையில் யாரும் செயல்பட முடியாது.
அசராத முலாயம் சிங்
2007 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்க உரையாற்றிக் கொண்டிருந்தார் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ். அந்த தேர்தலில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆயிரம் ஏமாற்றங்கள் இருக்கலாம்.. ஆனால் முலாயம் முகத்தில் அது ஒரு துளி கூட தென்படவில்லை. தனது தேர்தல் பிரச்சார யுக்தியில் அவர் தளர்வடையவில்லை. மாயாவதி ஆட்சிக்கு பிறகும், சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சி செய்தது என்பது வரலாறு.
மனம் தளராத கருணாநிதி
1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு தான் மறையும் வரை முதல்வராக பதவி வகித்தவர் எம்ஜிஆர். காங்கிரசிடமிருந்து கஷ்டப்பட்டு பிடித்த ஆட்சியை 10 வருடங்கள் முழுமையாக இழந்தபோதிலும், திமுக தலைவர் கருணாநிதி கலக்கம் அடையவில்லை. கட்சியை வலுப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தினார். மற்றவை வரலாறு!.
குத்துச்சண்டை வீரர்கள் போல
அரசியல்வாதிகள் பொதுவாக எந்த நிலை ஏற்பட்டாலும் தங்கள் நிலைமையை விட்டுக் கொடுப்பது கிடையாது. ஒரு குத்துச்சண்டை வீரர் எத்தனைதான் குத்துக்கள் பட்டாலும், எதிராளி மீது ஒரு குத்து விட்டுவிட வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியபடியே தொடர்ந்து சண்டை செய்வார். அது போன்ற மனநிலையில்தான் அரசியல்வாதிகள் இருப்பார்கள். அவர்களுக்கு சண்டை செய்வதுதான் முக்கியம். வெற்றி, தோல்வி இரண்டாவது பட்சம். "வெற்றியோ தோல்வியோ முதலில் சண்ட செய்யணும்" என்ற தமிழ் சினிமா வசனம் இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். இதில் சண்டை என்று குறிப்பிடுவது வெற்றியை நோக்கிய விடாப்பிடி மனநிலை, அல்லது அரசியலில் தனது இருப்பை பதிவு செய்யும் மனநிலை இவைதான்.
அரசியலும், கிரிக்கெட்டும்
காங்கிரஸ் கட்சி தலைமையிடம் இந்த பண்பு இருக்கிறதா, இல்லையா என்பதுதான் அக்கட்சியின் அரசியல் இருப்பை நிரூபிக்க போவதற்கான ஒற்றைக் கேள்வி. லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்த காங்கிரஸ் 2024 ஆம் ஆண்டில் மீண்டும் அதிகாரத்துக்கு வர முடியாது என்று யார் உறுதியாகக் கூறிவிட முடியும்? அரசியலிலும், கிரிக்கெட்டிலும் இறுதி நேரத்தில் கூட என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதானே எதார்த்தம்.
ராகுல் காந்தி
2004ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ராகுல்காந்தி, அரசு மற்றும் நிர்வாகத்தில் இருந்து விலகி இருந்தார். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியாக இருந்தது. தடைகளற்ற ஒரு தலைவராக உலா வந்தார். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி அரசுக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வந்தது. ஆனால் பதவியை துறந்தார்.
கூட்டணி அமைப்பு
எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் தேர்தல் வெற்றிக்கு வியூகங்களும் தந்திரங்களும் மிகவும் அவசியம். இதை 2004 ஆம் ஆண்டு சோனியாகாந்தி மிகச் சிறப்பாக செய்தார். கூட்டணிகளை ஏற்படுத்துவதில் திறமைசாலியாக இருந்தார். ராம்விலாஸ் பஸ்வான் வீட்டுக்கே சென்று கூட்டணியை உறுதி செய்தார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சியின் கூட்டணியை வெற்றிகரமாக உருவாக்கினார். சுமார் இரண்டு தசாப்தங்களாக எதிர்ப்பற்ற மற்றும் திறமையான தலைவராக சோனியா காந்தி காங்கிரசுக்கு வாய்த்தார்.
Recommended Video
சிக்கலை சமாளித்த சோனியா காந்தி
1998 ஆம் ஆண்டு கட்சி பல பிரிவுகளாக சிதறும் சூழ்நிலையில் இருந்தபோது மிகவும் சவாலான ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் சோனியா காந்தி. சரத்பவார், சங்மா, தாரிக் அன்வர் போன்ற அப்போதைய மூத்த தலைவர்கள் சோனியாவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி எதிர்த்து குரல் எழுப்ப, அவர்களை கட்சியிலிருந்து நீக்கினார். கலக குரலுக்காகத்தான் இந்த தண்டனையே தவிர, காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் போது சோனியா பிரதமராகவில்லை. மன்மோகன் சிங் தான் பிரதமராக்கப்பட்டார். அரசியல் சதுரங்கத்தில் ஆகச்சிறந்த சூத்திரதாரி என்று அப்போது சோனியா காந்தி வர்ணிக்கப்பட்டார்.
சோனியாவுக்கு எதிராக
1998 ஆம் ஆண்டில் சோனியா காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தபோது யாரெல்லாம் அவருடன் நின்றார்களோ அவர்களில் முக்கியமானவர்கள்தான் இப்போது வேறு ஒருவரை தலைவராக வேண்டுமென்று விண்ணப்பித்து கடிதம் எழுதிய 23 பேர் கொண்ட குழுவில் ஒருவர்களாகவும் இருக்கிறார்கள். அரசியலுக்கு தேவை ஆளுமை. கடந்த கால சாதனைகள் சொல்லிக்கொண்டு தொடர்ந்து இங்கு நீடித்திருக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
உலகம் முழுக்க
தலைமை மாற்றம் என்பது பல கட்சிகளிலும், பல நாடுகளிலும் சிக்கல்களை ஏற்படுத்திய ஒன்றுதான். அதை கடந்து வருவதில்தான் ஒரு கட்சியின் எதிர்காலம் அடங்கியுள்ளது. இந்தியாவின் மிக மூத்த கட்சியான காங்கிரஸ் இது போல பல சிக்கல்களை எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளது. அதில் நாம் குறிப்பிட்ட 1998 இறுதியாக நிகழ்ந்த ஒரு சிக்கல். அதன் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் தலைமை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த நூறு ஆண்டுகளில் சீன நாடு தனது தலைமையில் பல்வேறு மாற்றங்களை கண்டது. டோரி என்று அழைக்கப்படும் பிரிட்டனின், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்துதான் தொழிலாளர் கட்சியின் மீட்டெடுப்பு, டோனி பிளேர் தலைமையில் நடந்தது (1997ம் ஆண்டு தேர்தல்). உலகமெங்கும் பல தலைமை மாற்றங்கள் இக்கட்டான சூழ்நிலையில் அரங்கேறியுள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.. காங்கிரஸ் எதை நோக்கி செல்கிறது என்பதை!