கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசுக்கு குறைந்த விலை.. மாநில அரசுக்கு அதிக விலை ஏன்? உச்ச நீதிமன்றம்
டெல்லி: மருந்து நிறுவனங்களுக்கு அளித்த மானியம் காரணமாக மத்திய அரசுக்குத் தடுப்பூசி விலை குறைவாக இருக்குமானால் ஏன் மாநில அரசுகளுக்கு மட்டும் தடுப்பூசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது..
இந்தியாவில் தற்போது சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்யலாம் எனக் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வெளியான விலைப் பட்டியலில் இரு நிறுவனங்களும் மத்திய அரசுக்கு ஒரு விலையையும், மாநில அரசுகளுக்கு அதைவிடக் கூடுதல் விலையையும் அறிவித்திருந்தன. இது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தடுப்பூசி நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி ஆய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதியுதவி செய்திருந்த நிலையில், ஏன் இரு வேறு விலைகளில் தடுப்பூசி விற்பனை செய்யப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சீரம் நிறுவனத்திற்கு 3000 கோடி ரூபாயும் பாரத் பயோடெக் நிறுவன்திற்கு 1500 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுதவிர ஆய்வுப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இரண்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கியதாகக் குறிப்பிட்டது.
வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில், "மருந்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மானியம் காரணமாக, தடுப்பூசி விலை மத்திய அரசுக்கு மட்டும் குறைவாக உள்ளதா? அத்தகைய மானியம் தான் காரணம் என்றால் மாநில அரசுகளுக்கு எந்த அடிப்படையில் அதே விலை மறுக்கப்பட்டுள்ளது, இது மக்களுக்கு உடனடியாக தேவைப்படும் ஒன்று" என்றும் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து உரிய பதிலை அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications