யூடியூபர் டூ செக்யூரிட்டி கார்டு.. ஊடுருவிய 8 உளவாளிகளை தூக்கிய போலீஸ்! கல்லூரி மாணவனும் சிக்கினான்
டெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கூறி மூன்று மாநிலங்களில் இருந்து குறைந்தது எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். பஞ்சாபைச் சேர்ந்த மூவர், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை நாம் பார்க்கலாம்.
இளம் வயதில் உள்ள இன்புளுயன்சர்களை அணுகும் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் அவர்களுக்குப் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறார்கள். ஈஸியாக பணம் வரும் என நினைத்து இன்புளுயன்சர்களும் தவறான பாதைகளில் போய் மாட்டிக் கொள்வதாக ஹிசார் எஸ்பி சஷாங்க் குமார் சவான் தெரிவித்தார்.

இந்திய அதிகாரிகள் கடந்த சில நாட்களாக எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையில் இதுவரை எட்டு பேர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் யார்.. அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன என்ற விவரத்தை நாம் பார்க்கலாம்.
ஜோதி மல்ஹோத்ரா
இவர் 'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். டிராவல் வ்லாக்கரான ஜோதி மல்ஹோத்ரா, ஹரியானாவின் ஹிசார் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இந்திய ராணுவம் குறித்த தகவல்களைப் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்ததாக அவர் கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார். 33 வயதான அவர் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டதாகவும், குறைந்தது இரண்டு முறையாவது பாகிஸ்தானுக்குச் சென்றிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஜோதியை இந்தியாவில் தங்கள் அசர்ட் போலவே வளர்க்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவேந்திர சிங் தில்லான்
25 வயதான தேவேந்திர சிங் தில்லான், ஹரியானா மாநிலம் பாட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் படிப்பைப் படித்து வந்த கல்லூரி மாணவர் ஆவார். கடந்த மே 12ம் தேதி துப்பாக்கி வைத்திருப்பது போன்ற போட்டோக்களை பகிர்ந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானுக்குச் சென்று வந்திருப்பது தெரிய வந்தது. மேலும், பாட்டியாலா ராணுவ கண்டோன்மென்ட்டின் போட்டோ உட்பட முக்கியமான தகவல்களை அவர் பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளிடம் பகிர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
நௌமன் இலாஹி
ஹரியானாவில் செக்யூரிட்டி வேலை செய்யும் நௌமன் இலாஹி (24), சில நாட்களுக்கு முன்பு பானிபட்டில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இவர், பாகிஸ்தானுக்குப் பல தகவல்களை வழங்கியுள்ளார். மேலும், அதற்காகத் தனது மைத்துனர் வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
அர்மான்
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் கடந்த மே 16ம் சேசி ஹரியானாவின் நூவ் பகுதியைச் சேர்ந்த அர்மான் (23) கைது செய்யப்பட்டார். இந்தியா பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்தபோது அவர், பாகிஸ்தானுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அர்மானிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷாஜாத்
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜாத்.. கடந்த ஞாயிற்றுக்கிழமை மொராதாபாத்தில் சிறப்புப் படை அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை அவர் தனது பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு அனுப்பியது தெரிவித்துள்ளது. பல முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள இவர், சட்டவிரோத கடத்தலிலும் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
முகமது முர்தாசா அலி
ஜலந்தரில் குஜராத் போலீசார் நடத்திய சோதனையில் முகமது முர்தாசா அலி என்பவர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிற்காக அவர் உளவு பார்த்ததாகத் தகவல் கிடைத்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். உளவுத் தகவல்களை சீக்ரெட்டாக அனுப்பத் தனியாக ஒரு செயலியையும் கூட அவர் டெவலப் செய்ததாகக் கூறப்படுகிறது. அவருடன் நான்கு மொபைல்கள் மற்றும் மூன்று சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தவிர கசாலா மற்றும் யாமின் முகமது ஆகிய இருவரும் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனர். அவர்களும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதுபோல கடந்த சில நாட்களில் மட்டும் இத்தனை பேர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications