காணாமல் போகும் ராகுல் காந்தி டீம்.. சில ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து விலகிய பல முக்கிய தலைவர்கள்!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரான மிலிந்த் தியோரா இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த 2019க்கு பிறகு பல தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகும் நிலையில், அந்த லிஸ்டில் இவரும் இணைந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். ராகுல் காந்தியின் டீம் என அறியப்பட்ட பலரும் கூட காங்கிரஸில் இருந்து விலகிவிட்டனர். அப்படிக் கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள் பற்றிப் பார்க்கலாம்.

அல்பேஷ் தாக்கூர்: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அல்பேஷ் தாக்கூர், கடந்த 2019இல் குஜராத் மாநிலத்தில் இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராகவே வாக்களித்தார். தொடர்ந்து ஜூலை 2019இல் கட்சியில் இருந்து விலகினார். சில நாட்களுக்குப் பிறகு அவர் பாஜகவில் சேர்ந்தார். அப்போது நடந்த ராதாபூர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்த போதிலும், கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் காந்திநகர் தெற்கு தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.
சிந்தியா: இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸிலிருந்து விலகி 2020இல் பாஜகவில் சேர்ந்தார். அப்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள கமல்நாத் அரசு வீழக் காரணமாக இருந்ததே இந்தச் சம்பவம் தான். தொடர்ந்து சிவராஜ் சிங் சவுஹான் அரசு தலைமைக்கு வந்தது. இவர் முன்னாள் மத்திய அமைச்சரான மாதவராவ் சிந்தியாவின் மகன் ஆவார்.
ஜிதின் பிரசாத்: ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜிதின் பிரசாத், உத்தரப் பிரதேச தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு 2021இல் பாஜகவில் இணைந்தார். உ.பி.யில் காங்கிரஸின் முக்கியமான பிராமண தலைவராக இருந்தவர் பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவில் இணையும் போது காங்கிரஸ் பெயரைக் கூட அவர் சொல்லவில்லை. அவர் "பாஜக மட்டுமே உண்மையான அரசியல் கட்சி. அது ஒரே தேசியக் கட்சி. மீதமுள்ளவை பிராந்திய கட்சிகள்" என்று விமர்சித்தார்.
கபில் சிபல்: கடந்த 2022ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் வெளியேறினார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் 2022 மே 16ஆம் தேதி காங்கிரஸில் இருந்து விலகினார்.. இருப்பினும், ஒரு வாரம் கழித்து சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக ராஜ்யசபாவிற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் போதுதான் அதை வெளிப்படையாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை உடனடியாக எடுக்கவில்லை என்ற அவர், இதன் பிறகு வேறு எந்த கட்சியிலும் தான் சேரப்போவது இல்லை என்றும் அப்போதே கூறினார்.
குலாம் நபி ஆசாத்: அதே ஆண்டில் காங்கிரஸ் தனது முக்கியமான சிறுபான்மை முகமான குலாம் நபி ஆசாத்தையும் இழந்தது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர், காங்கிரஸின் ஜி23 அதிருப்தி தலைவர்கள் லிஸ்டிலும் இருந்தவர். தனது ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தியை முதிர்ச்சியற்றவர் என்பதில் தொடங்கிப் பல காட்டமான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். இப்போது அவர் காஷ்மீரில் தனியாக ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.
ஹர்திக் படேல்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் படேலும் 2022ஆம் ஆண்டு மே மாதம் காங்கிரஸில் இருந்து விலகினார். 2019இல் காங்கிரஸில் இணைந்த அவர், 3 ஆண்டுகள் மட்டுமே அக்கட்சியில் இருந்துள்ளார். ராகுல் காந்தியைத் தனது ராஜினாமா கடிதத்தில் மறைமுகமாகச் சாடிய அவர், தலைமையில் உள்ளவர்கள் மொபைல்களில் மூழ்கி இருப்பதாகச் சாடினார். ஒரு மாதம் கழித்து பாஜகவில் சேர்ந்தார்.
அஸ்வனி குமார்: முன்னாள் மத்திய அமைச்சரான அஸ்வனி குமார், பஞ்சாப் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பிப்ரவரி 2022இல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார். பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டிக்கு தலைமை தாங்கிய சுனில் ஜாகர், 2022ல், அப்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்ததற்காக டெல்லி தலைமை அவர் கண்டித்தது. இதையடுத்து அவர் காங்கிரஸில் விலகி பாஜகவில் இணைந்த நிலையில், அவர் பஞ்சாப் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
பல தலைவர்கள்: அதேபோல 2022 உபி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்பிஎன் சிங் காங்கிரஸில் விலகி பாஜகவில் இணைந்தார். பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த அவர், பிரியங்கா காந்தியின் உபி பிரச்சாரத்தால் ஓரம்கட்டப்பட்டதாகவும் இதனால் அவர் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காங்கிரஸில் இருந்து விலகினார். தொடர்ந்து அடுத்த மாதமே அவர் பாஜகவில் இணைந்தார். இந்தியாவை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல தெளிவான பார்வை கொண்டவர் பிரதமர் மோடி என அவர் பாராட்டினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி, தனது மகனின் முடிவு குறித்து வேதனையும் ஏமாற்றமும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது முரளி தியோரா: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா இப்போது இந்த லிஸ்டில் இணைந்துள்ளார். இன்று அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து அவர் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை தெற்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே பிரிவு போட்டியிட உள்ளதாகக் கூறியதற்கு தியோரா அதிருப்தி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications