'யாரை கேட்டு மைக் ஆஃப் பண்ணுனீங்க..' ராஜ்ய சபாவில் ரூல்ஸ் பேசி.. பொளந்து கட்டிய திருச்சி சிவா..வைரல்
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை குறுக்கிடக்கூடாது விதி இருக்கும்போது யாருடைய உத்தரவின்படி அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது எனத் திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசிய வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
நாட்டில் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது பெகசாஸ் விவகாரம் தான், நாட்டின் பல முக்கிய தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகச் செய்தி வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் முக்கிய தலைவர்கள், 40 செய்தியாளர்கள் எனப் பலரது மொபைல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாகச் செய்தி வெளியானது.
|
நாடாளுமன்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. சரியாக அதற்கு முந்தைய நாள் மாலை, அதாவது ஜூலை 18ஆம் தேதி இந்தத் தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சி எம்பிகள், இதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

திருச்சி சிவா வைரல் பேச்சு
இந்தச் சூழலில் தான், நேற்று மாநிலங்களவையில் திருச்சி சிவா பேசிய வீடியோ இப்போது வரைலாகி வருகிறது. அதாவது நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிக்கொண்டிருந்த போதே அமைச்சர் குறுக்கிட்டு பதில் அளித்தார். அது குறித்துப் பேசிய திருச்சி சிவா, நாடாளுமன்ற விதியின்படி எதிர்க்கட்சி தலைவர் பேசிக் கொண்டிருக்கும்போது யாரும் குறுக்கிடக்கூடாது என்றார்.

ரூல்ஸ் புக்
அப்போது அவைத்தலைவர் குறுக்கிட்டு, "எந்த விதி அப்படிக் கூறுகிறது" எனக் கேட்டார். விதி எண் 258 எதிர்க்கட்சி தலைவர் பேசும் யாரும் குறுக்கிடக்கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது என்று திருச்சி சிவா பதிலளித்தார். அதன் பின்னர் ரூல்ஸ் புக்கில் சரி பார்த்த அவைத்தலைவர், திருச்சி சிவாவை தொடர்ந்து பேச அனுமதி அளித்தார்.

விதி எண் 258
தொடர்ந்து திருச்சி சிவா பேசுகையில், "நமது நாடாளுமன்ற வழக்கத்தின்படி விதி எண் 258இன் கீழ், கூட்டத்தொடரில் பிரதமரோ அல்லது எதிர்க்கட்சி தலைவரோ பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களை யாரும் குறுக்கிடக்கூடாது. இது தான் நமது வழக்கம் நீங்கள் எதிர்க்கட்சி தலைவரைப் பேச அழைத்தீர்கள். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அமைச்சர் அதைக் குறுக்கிட்டுப் பேசினார். எதிர்க்கட்சி தலைவரின் மைக் ஆஃப் செய்யப்பட்டு, அமைச்சரின் மைக் ஆன் செய்யப்பட்டது.

குறுக்கிடக்கூடாது
எதிர்க்கட்சி தலைவர் பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிடக்கூடாது என்று விதி இருக்கும் போது, மைக்கை ஆஃப் செய்ய உத்தரவிட்டது யார்? ஒரு ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பங்கு மிக மிக முக்கியமானது. நாடாளுமன்றத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது" என்று ஆவேசமாகப் பேசினார். ரூல்ஸ் புக்கை விளக்கி திருச்சி சிவா பேசிய பேச்சின் வீடியோ இப்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது

தமிழில் கோஷம்
முன்னதாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிகள் அனைவரும் இணைந்து, "வேண்டும் விவாதம் வேண்டும்" எனத் தமிழில் கோஷங்களை எழுப்பியுள்ளனர். பொதுவாக நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் எம்பிகள் கோஷம் எழுப்புவார்கள். ஆனால் தமிழ் மொழி அனைத்து எதிர்க்கட்சி எம்பிகளையும் இணைத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் மக்கத்தில் 'பொதுவாக, நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் கோஷங்கள் எழுப்பப்படும். ஆனால் முதல் முறையாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து, 'வேண்டும் விவாதம் வேண்டும்' எனத் தமிழில் முழக்கமிட்டோம். அரசு வலுக்கட்டாயமாக மசோதாக்களை நிறைவேற்றும்போது நாங்கள் விவாதத்தை விரும்புகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications