விஜயதாரணி வந்துட்டாங்க.. உடனே ஜோதிமணி.. டெல்லியில் ஒரே "சூறாவளி" போல.. கடைசியில் அந்த ஹைலைட் பாருங்க
டெல்லி: தமிழக கதர் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாம் டெல்லியில் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாம்.. என்ன காரணம் தெரியுமா?
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த பிப்ரவரி, 2019-ல் நியமனம் செய்யப்பட்டார். அந்த கட்சியின் விதிமுறைகளின்படி 3 வருடங்கள் மட்டுமே, தலைவர் பதவியில் நீடிக்க முடியும்.

அதன்படி அழகிரியின் பதவிக்காலம் கடந்த வருடம் பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது... இதையடுத்து, அந்த பதவியை பிடிக்க பலரும், கடந்த ஒருவருட காலமாகவே, முயற்சித்து வருகிறார்கள்.
ஏற்கனவே, காங்கிரஸிலிருந்து மூத்த நிர்வாகிகள் விலகல், தலைவர் நியமனம் போன்றவற்றால் குழப்பம் ஏற்பட்டதால், தலைவர் விவகாரம் பெரிதாக கவனிக்கப்படவில்லை.. பிறகு, பாரத் ஜோடோ யாத்திரை, ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக புதிய தலைவர் நியமனம் தள்ளிப்போனது.. இதற்கு பிறகு, கர்நாடக தேர்தல் நடந்து முடிந்தது.. அப்போதும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு பிறகு, ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுவிட்டார்.
தலைவர் யார்: இப்போது, தாயகம் திரும்பிஉள்ள நிலையில், டெல்லியில்தான் தங்கியிருக்கிறார். எனவே, தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர் யார் என்ற போட்டி, உச்சக்கட்டத்துக்கு சென்றுவிட்டது.
மூத்த தலைவர்கள் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, விஜயதாரணி, செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர், இந்த தலைவர் பதவிக்கு, மும்முரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
ஜோதிமணி: ஜோதிமணியை பொறுத்தவரை, தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்.. ராகுல் காந்தியின் நம்பிக்கையை நேரடியாக பெற்றவர்.. அவர்மீது சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்மதிப்பு இருப்பதால் அதை வைத்து பதவியை பிடிக்க காய் நகர்த்திவருகிறார். ஆனாலும், சீனியர் தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டு வருவதால், காங்கிரஸ் தலைவர் கார்கே விரும்பவில்லையாம்.
இதற்கு அடுத்ததாக கார்த்தி சிதம்பரம் இருக்கிறார்... இவர் பிரியங்கா காந்தி மூலமாக தலைவர் பதவியைப் பிடிக்க முயன்றுவருகிறார். மேலும், இது தொடர்பாக ஆதரவு கேட்டு திமுக தலைமையிடமும் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியானது.. ஆனால், கார்த்தி சிதம்பரத்தின் மீது ராகுல் கடும் அதிருப்தியில் இருப்பதால் அவருக்கான வாய்ப்பு மிக குறைவு என்கிறார்கள்.
செல்வப்பெருந்தகை: இதில் செல்வப்பெருந்தகை மற்றும் ஜோதிமணி ஆகியோரது பெயர்கள் ஃபைனல் லிஸ்டில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், டாக்டர் செல்லக்குமார் எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன், விஜயதாரணி என பலரும் பதவி பெறும் போட்டியில் தீவிரமாக இருக்கிறார்களாம்..
அனைவருமே சீனியர்கள் என்பதால், யாரை தேர்ந்தெடுப்பது என்று மேலிடமே குழம்பி போயுள்ளதாம்.. ஒருவேளை, இந்த முறை வித்தியாசமாக பெண் தலைவரை நியமிக்கப்பட நேர்ந்தால், அதற்கும் 2 பெண் தலைவர்களுக்குள்ளும் போட்டி எழுந்துள்ளது.
ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த ஒவ்வொருவருக்குமே, டெல்லியில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்கள் சிபாரிசு செய்கிறார்களாம்.. அவர்களின் செல்வாக்குதான், தமிழக தலைவரை தேர்வு செய்வதில் அடித்தளமாக இருக்கும் என்கிறார்கள்.. காங்கிரசில் பதவி பெற கீழ்மட்டத்தில் மட்டுமல்ல. மேல்மட்டத்திலும் அப்படித்தான் போலிருக்கிறது.. எனினும், தமிழக கதர் தலைவர்கள் எல்லாம் டெல்லியில் முகாமிட்டுள்ளதால், யார் அடுத்த தலைவர் என்ற ஆர்வம் எகிறி வருகிறது.












Click it and Unblock the Notifications