இந்தியா- கனடா உறவுக்கு வேட்டு - 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் யார்?
டெல்லி: இந்தியா- கனடா இடையேயான உறவில் பெரும் விரிசலை உருவாக்கிவிட்டது காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். யார் இந்த காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார்?
காலிஸ்தான் என்பது என்ன? இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பது 40 ஆண்டுகளுக்கு முந்தைய கோரிக்கை. இந்த தனிநாட்டின் பெயர்தான் காலிஸ்தான்.

யார் காலிஸ்தான் தீவிரவாதிகள்?: 1970களின் இறுதியில் காலிஸ்தான் விடுதலைக்காக பிந்தரன் வாலே தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை பிந்தரன் வாலே தலைமையிலான காலிஸ்தான் தீவிரவாதிகள் முன்னெடுத்தனர். காலிஸ்தான் தீவிரவாதிகள் எப்படி திடீரென உருவாக்கப்பட்டனர்? என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவின. ஆனால் இந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் அன்றைய மத்திய அரசுக்கு மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்தனர். பிந்தரன் வாலே தலைமையிலான இந்த குழு பல்வேறு தாக்குதல்களை இடைவிடாமல் நடத்தி வந்தது. இதனால் காலிஸ்தான் தீவிரவாதத்தை அழிக்க வேண்டிய நெருக்கடிக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் தள்ளப்பட்டார்.
இந்தியாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஒழிப்பு: பிந்தரன்வாலே தலைமையிலான தீவிரவாதிகள் பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் நுழைந்து அதனையே தங்களது ராணுவ தளமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் சீக்கியர்களின் புனித தலத்துக்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை ராண்ணுவம் தவிர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள 1984-ல் பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார். பல நாட்கள் நீடித்தது ராணுவம்- பிந்தரன் வாலே காலிஸ்தான் தீவிரவாதிகள் இடையேயான பொற்கோவில் யுத்தம். இறுதியில் பொற்கோவில் முழுவதும் பிந்த்ரன்வாலே உள்ளிட்ட பல நூறு தீவிரவாதிகளின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் வெற்றிகரமாக முடிவடைந்தது. காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கபப்ட்டது.
இந்திரா காந்தி படுகொலை: சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலுக்குள் ராணுவ நடவடிக்கை, பிந்தரன் வாலே உள்ளிட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் அழிப்பு ஆகியவற்றால் சீக்கியர்கள் கொந்தளித்து போயினர். இதன் விளைவாக அடுத்த சில மாதங்களிலேயே பிரதமர் இந்திரா காந்தியை அவரது சீக்கியர் பாதுகாவலர்களே சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் உலகை அதிர வைத்தது.
சீக்கியர் படுகொலை: இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லி மற்றும் வட இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் தேடித் தேடி படுகொலை செய்யப்பட்டனர். சீக்கியர்கள் வெளியிடங்களில் நடமாடவே முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அன்றைய காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்டமான சீக்கியர் இனப்படுகொலை என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்குகள் இன்றும் நடைபெற்று வருகின்றன.
ஏர் இந்தியா விமானம் தகர்ப்பு: காலிஸ்தான் தீவிரவாதிகளின் உச்சகட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் 1985-ல் நடத்தப்பட்டது. கனடாவில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் அட்லாண்டிக் கடல் மீது பறந்த நிலையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில் 329 பேர் பலியாகினர். அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முந்தைய மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுதான்.
வெளிநாடுகளில் காலிஸ்தான் தீவிரவாதிகள்: இந்தியாவில் காலிஸ்தான் விடுதலை குறித்து பேச முடியாத நிலையில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள், நாட்டை விட்டு கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 'அரசியல்' அதிகளாக சென்று தஞ்சமடைந்தனர். அப்படி தஞ்சமடைந்த சீக்கியர்கள் அங்கே சென்று காலிஸ்தான் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என நிழல் அரசாங்கம் பல்வேறு அமைப்புகளை உருவாக்கின. இந்தியாவுக்குள் காலிஸ்தான் தீவிரவாதத்தை பல்வேறு வழிகளில் தலையெடுக்க வைக்க சதித் திட்டம் தீட்டி செயல்பட்டனர்.
நிஜ்ஜார் படுகொலை: இத்தகைய தீவிரவாத அமைப்புகளில் ஒன்றுதான் காலிஸ்தான் புலிப்படை. இதன் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார். கடந்த சில மாதங்களாக காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்த நாடுகளில் போட்டுத்தள்ளப்பட்டனர். இந்த பட்டியலில் நிஜ்ஜாரும் ஒருவர். நிஜ்ஜார் படுகொலை கனடா வாழ் சீக்கியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனாலேயே நிஜ்ஜார் படுகொலையை முன்வைத்து இந்தியா- கனடா உறவு இப்போது முறிந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications