தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே-உ.பி.யில் பசு பாதுகாப்பு திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தியவர்!
டெல்லி: மத்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக பொறுப்பேற்றுள்ள அனூப் சந்திர பாண்டே, உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பசு பாதுகாப்பு திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தியவர். 37 ஆண்டுகாலம் உ.பி. அரசில் தலைமை செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த அனூப் சந்திர பாண்டே, அடுத்த ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அடுத்தடுத்து அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அனூப் நியமனமும் விமர்சனமும்
உத்தரப்பிரதேச மாநில தலைமை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பு வகித்து 2019-ல் ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே திடீரென் மத்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். உ.பி. தேர்தலை முன்வைத்தே அனூப் சந்திர பாண்டே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்கிற விமர்சனமும் உண்டு.

பசு பாதுகாப்பு திட்டத்தில் தீவிரம்
1984-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனூப் சந்திர பாண்டே, தற்போதைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான பசு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தியவர். அம்மாநிலத்தில் ரூ613 கோடி செலவில் பசு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக உ.பி.யில் மாவட்ட அளவில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களையும் தீவிரமாக நடத்தினார் அனூப் சந்திர பாண்டே.

உபி தலைமை செயலாளர்
2018-19-ம் ஆண்டு காலத்தில் மட்டும் பசுக்களை துன்புறுத்தியதற்காக 100க்கும் மேற்பட்டோர் உ.பி.யில் கைது செய்யபட்டனர். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 613 பசு பாதுகாப்பு மையங்களான கோசாலைகள் அரசு செலவில் அமைக்கப்பட்டன. இதன் பின்னர் 2018-ல் உ.பி. மாநில தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றார் அனூப்.

பாஜக கணக்கு
உ.பியில் பெரும்பாலான மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் அனூப். இவர் 2024-ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையராக பதவியில் நீடிப்பார். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெல்வதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலையில் உள்ளது. இதனால்தான் காங்கிரஸின் ஜிதின் பிரசாதாவையும் கட்சியில் இணைத்தது. இந்த நிலையில் அனூப் சந்திர பாண்டேவை தேர்தல் ஆணையராக நியமித்திருப்பது சட்டசபை தேர்தலில் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போட்டுள்ளது பாஜக.












Click it and Unblock the Notifications